சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கிருஷ்ணகிரி மாணவன் கீர்த்தி வர்மாவுக்குகை மாற்று அறுவை சிகிச்சை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
சென்னை: முதல்வரின் உத்தரவையடுத்து கிருஷ்ணகிரி மாணவன் கீர்த்தி வர்மாவுக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கீர்த்திவர்மா என்ற மாணவன் பிளஸ்2 தேர்வில் இரு கைகளும் இன்றி 471 மதிப்பெண் பெற்றுள்ளார். மாற்றுத்திறனாளி மாணவர் கீர்த்திவர்மா, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், தனக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவுமாறு கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை ஏற்று, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை அமைச்சருக்கு முதல்வர் உத்தரவிட்டார். இதையடுத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாற்றுத்திறனாளி மாணவர் கீர்த்திவர்மாவை சென்னை தலைமை செயலகத்திற்கு நேற்று அழைத்து, அவருக்கு வேண்டிய சிகிச்சை வழங்குவதற்குரிய ஆலோசனையினை மருத்துவக் குழுவினரையும் அழைத்து ஆலோசனை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: மாணவன் கீர்த்திவர்மாவுக்கு, ஸ்டான்லி மருத்துவமனையில் கை மாற்று அறுவை சிகிச்சை சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவனுக்கு திங்கட்கிழமை பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. கை தானம் கிடைக்கப்பெற்ற உடன் அறுவைசிகிச்சை செய்யப்படும். கீர்த்தி வர்மா கை மாற்று அறுவை சிகிச்சை மருத்துவ மொற்கொள்ள வசதியாக பொறியியல் படிக்க சென்னையை ஒட்டி உள்ள கல்லூரியில் படிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். அவரின் 4 ஆண்டு கால பொறியியல் படிப்புக்கான செலவை ஆனந்தம் அறக்கட்டளை மேற்கொள்ள உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
