கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் சாலையோரங்களில் அனுமதியின்றி நடத்தும் தள்ளுவண்டி கடைகளை அகற்றாவிட்டால், உரிமையளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை கிருஷ்ணகிரி உதவி கோட்டப்பொறியாளர் அன்புஎழில் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி நகரில், நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ள சென்னை சாலை, பெங்களூரு சாலை, சேலம் சாலை மற்றும் ராயக்கோட்டை சாலை உள்ளிட்டவற்றில் மாலை மற்றும் இரவு நேரங்களில் நெடுஞ்சாலைத்துறையின் அனுமதியின்றி, ஆங்காங்கே தற்காலிக தள்ளுவண்டி கடைகள் மூலம் திண்பண்டங்கள், சிற்றுண்டி மற்றும் பிரியாணி ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன.
இதனால் மாலை மற்றும் இரவு வேலைகளில் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அனுமதியின்றி கடைகள் அமைத்து விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்களின் தரமும் சரியாக இருக்க வாய்ப்பில்லை. எனவே, பொதுமக்கள் இத்தகைய தற்காலிக கடைகள் மூலம் விற்கப்படும் தரமற்ற உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். தற்காலிக கடைகளை அவற்றின் உரிமையளர்கள் அப்புறப்படுத்தி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாவண்ணம் நடக்க வேண்டும். அகற்றப்படாத கடைகள் போலீசார் உதவியுடன் அப்புறப்படுத்தி, பொது ஏலத்தில் விடப்படும். மேலும், கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


