Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கே.என்.நேரு, சேகர்பாபு, அன்பில் மகேஷ் 3 அமைச்சர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: தமிழக அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு, அன்பில் மகேஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து போலீசார் நேற்று தீவிர சோதனை மேற்கொண்டனர். சென்னை ஓட்டேரி செல்லப்பா தெருவில் வசித்து வரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்து மர்ம நபர் ஒருவர் தமிழக டிஜிபி அலுவலகத்திற்கு இ-மெயில் அனுப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அமைச்சரின் வீட்டிற்கு விரைந்து சென்றனர்.

மேலும், வெடிகுண்டு நிபுணர்கள் குழுவைச் சேர்ந்த தலைமை காவலர ரமேஷ் மற்றும் குழுவினர் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் வீடு முழுவதும் சோதனை மேற்கொண்டனர். வெடிகுண்டுகளை கண்டறியும் ரூடி என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தினர். நீண்டநேர சோதனையின் முடிவில் இ-மெயிலில் வந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.

இதேபோல், டிஜிபி அலுவலகத்துக்கு, திருச்சியில் உள்ள அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் மற்றும் திருச்சி என்ஐடி கல்லூரி மகளிர் விடுதி, சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் கல்லூரி ஆகிய இடங்களில் வெடி குண்டுகள் வைக்கப்பட்டுள்ளது என்று டிஜிபி அலுவலகத்துக்கு இ-மெயில் வந்தது. இதைத்தொடர்ந்து திருச்சி தில்லைநகர் 6வது கிராசில் உள்ள அமைச்சர் கே.என்.நேரு வீடு, தென்னூர் அண்ணா நகரில் உள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோரது வீடுகளில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிட்டனர். இதுவும் புரளி என தெரிந்தது.

மாஜி அமைச்சர் வீட்டிலும் சோதனை: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் குண்டு வெடிக்கும் என்றும் இ-மெயில் மிரட்டல் வந்தது. சோதனையில் அதுவும் புரளி என தெரிந்தது. போலீசார் விசாரிக்கி ன்றனர்.

* ரம்யா கிருஷ்ணன், சின்மயிக்கும் குண்டு மிரட்டல்

ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் பாடகி சின்மயி வீடுகள் மற்றும் ஆர்.ஏ.புரத்தில் உள்ள முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கிரிஜா வைத்தியநாதன், பாஜ பிரமுகர் அமர்பிரசாத் ரெட்டி வீடுகளில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக நேற்று டிஜிபி அலுவலகத்துக்கு இமெயில் வந்தது. அங்கு சென்றும் போலீசார் சோதனையிட்டனர். அதுவும் புரளி என தெரிந்தது. இதுதொடர்பாகவும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.