திருவனந்தபுரம்: கேரளத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பெய்து வரும் கனமழை நாளை வரை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த 5 நாளில் மழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. 4 பேரை காணவில்லை. கோட்டயம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர் உள்பட பல மாவட்டங்களில் நேற்றும் பலத்த மழை பெய்தது.
நிலச்சரிவு அபாயம் உள்ள வயநாடு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் இங்கு உஷார் நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், இரவு நேரங்களில் மலையோரப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் வயநாடு மாவட்ட கலெக்டர் மேகஸ்ரீ தெரிவித்துள்ளார்.
கோழிக்கோடு-வயநாடு மற்றும் கண்ணூர்-வயநாடு இடையே உள்ள மலைப்பாதைகளில் இரவு நேர பயணத்திற்கு கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாளை வரை கேரளத்தில் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று 7 மாவட்டங்களுக்கும், நாளை 5 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
