Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கேரளாவில் 2 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமனம்: ஆளுநர் உத்தரவு

டெல்லி: கேரளா அரசின் பரிந்துரையை ஏற்று 2 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமித்து அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரணைக்கு வரும் நிலையில், திடீர் என்று நியமித்து உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டை போன்று கேரளாவிலும் ஆளுநர்கள் மூலம் முட்டுக்கட்டை போடும் நடவடிக்கைகளில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது. கேரளாவில் 2 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கலாம் அம்மாநில ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் காலம் தாழ்த்தி வந்தார். இதையடுத்து கேரள ஆளுநருக்கு எதிராக, அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் பரிந்துரைத்த பெயர்களை அம்மாநில ஆளுநர் ஏற்று நியமனம் நடத்தாததை தொடர்ந்து கேரளா அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கை பல முறை விசாரித்த உச்சநீதிமன்றம், துணைவேந்தர்களை நியமிக்க, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சுதான்சு துலியா தலைமையிலான தேடுதல் குழுவை அமைத்து உத்தரவிட்டது. இதையடுத்து இந்தக்குழு, இரண்டு பல்கலைக்கழகங்களுக்கும் தலா ஒரு பெயரை இறுதி செய்து வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில், திடீரென்று ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் இரண்டு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி டிஜிட்டல் பல்கலைக்கழகத்துக்கு முதலமைச்சர் பரிந்துரைத்த சஜி கோபிநாத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு ஆளுநர் தேர்வு செய்த சீசா தாமஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு கேரளா அரசு தரப்பும் ஒப்புதல் வழங்கியுள்ளது.