சென்னை: திமுக வர்த்தக அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம் வெளியிட்ட அறிக்கை: தன்னைவிட சீனியர்களிடம் காட்டிய மன்னிக்கும் தன்மையை ஜெயலலிதா காட்டியதில்லை. தனிக்கட்சி நடத்தி பா.ஜ.க.வுடன் உறவாக இருந்த போதும், திருநாவுக்கரசர், ஏ.சி.எஸ் போன்றோருக்கு எம்பி சீட் இல்லை என மறுத்தார். எம்.ஜி.ஆர்.காலத்தில் ஆலந்தூர் நகராட்சிக்கு மோகனரங்கம் பெயர் சூட்டப்பட்டது. அந்த மோகனரங்கம், டெல்லி டூ சென்னை டிக்கெட் போட்டுவிட்டு ஜெயலலிதா ஆந்திராவில் இறங்குகிறார் என உளவு பார்த்து எம்.ஜி.ஆரிடம் கூறியதால், அவரது மறைவு நாளான்று அரைக்கம்பத்தில் கொடி கூட இறக்கவில்லை, தானும் போய் பார்க்கவில்லை.
ஏன் ஆர்.எம்.வீயையே, முதலில் காரில் அவ்வை சண்முகம் சாலை வரை கூட்டிச் சென்று, இனி நான் பொதுச்செயலாளர், அண்ணன் ஆர்.எம்.வீ. இணைப்பொதுச்செயலாளர் என்றார். 2 மாதம் கழித்து மூத்த இணைப்பொதுச்செயலாளராக எஸ்.டி.எஸ்ஸை போட்டு கீழிறக்கியதுடன், சில மாதம் கழித்து, 6 துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவராக்கினார். 1991ல் ஆர்.எம்.வீக்கு சீட் கொடுக்காமல் அவமானப்படுத்தினார். அதன்பின் அடையார் பார்க் ஷெர்ட்டன் ஓட்டலில் நடந்த விழாவில், மணிரத்தினம் வீட்டில் வெடிகுண்டு வெடித்ததை ரஜினி பகிரங்கமாக பேசியதற்காக ஆர்.எம்.வீ யை அமைச்சர் பொறுப்பிலிருந்து வெளியேற்றினார். காரணமே இன்றி செங்கோட்டையனை அமைச்சராக்காமல் அவமதித்தார். தன்னை அரசியலுக்கு அழைத்து, உதவி செய்த சசிகலா நடராஜனை ஒரு கவுன்சிலர் கூட ஆக்காமல் பார்த்துக் கொண்டார்.
அண்ணா காலத்து பண்ருட்டி ராமச்சந்திரனை, கலைஞர், எம்.ஜி.ஆரிடம் அமைச்சராக பணிபுரிந்தவரை நால்வர் அணி என்று சென்றதால் கடைசிவரை சட்டமன்ற உறுப்பினராக கூட ஆகிவிடாமல் பார்த்துக் கொண்டார். போட்டி அ.தி.மு.க. உருவானபின் அரங்கநாயகம், படியில் தொங்கிய எஸ்.டி.எஸ், கண்ணப்பன், பொன்னுசாமி, கு.ப.கிருஷ்ணன், தென்னவன், கே.கே.எஸ்.எஸ் ஆரை மீண்டும் பொறுப்புக்கு வராமல் ஜெயலலிதா பார்த்துக்கொண்டார். கலைஞர், தளபதி, எம்.ஜி.ஆர் என மன்னிக்கும் பக்குவம் பெற்றவர்கள் உண்டு. இவ்வாறு காசிமுத்து மாணிக்கம் கூறினார்.
