Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Leader
search-icon-img
Advertisement

ஜெயலலிதா பிறந்த நாளான பிப். 24ம் தேதி தனிக்கட்சி அறிவிப்பை வெளியிடுகிறார் சசிகலா: பிரமாண்ட கூட்டத்துக்கு ஏற்பாடு

மன்னார்குடி: ஜெயலலிதா பிறந்த நாளான வரும் 24ம் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த சசிகலா முடிவு செய்துள்ளார். அந்த பொதுக்கூட்டத்தில் தனிக்கட்சி அறிவிப்பை அவர் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியை துரோகி என விமர்சித்து வந்த அமமுக பொது செயலாளர் டிடிவி.தினகரன், திடீரென அதிமுக- பாஜ கூட்டணியில் சேர்ந்து விட்டார். ஓ.பன்னீர் செல்வமும் அதே கூட்டணியில் சேர முடிவு செய்துள்ளார். ஆனால் சசிகலா எந்த முடிவையும் எடுக்காமல் இருந்து வந்தார். அதிமுக தொண்டர்களை பொறுத்தவரை, ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவும், ஒரு முக்கிய தலைவராக பார்க்கப்படுகிறார். சொத்து குவிப்பு வழக்கில் விடுதலையான பிறகு, பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கூறி வந்தார். ஆனால் எடப்பாடியின் விடாப்பிடியான எதிர்ப்பு காரணமாக சசிகலாவின் இந்த எண்ணம் ஈடேறவில்லை.

இந்த சூழ்நிலையில் அரசியலில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள சசிகலா விரும்புகிறார். அண்ணா நினைவு நாளில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் தேர்தலில் தனது ஆதரவாளர்கள் களமிறக்கப்படுவார்கள் என்று கூறினார். இதனிடையே நேற்று சசிகலா தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். அப்போது தனிக்கட்சி தொடங்க முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. வரும் பிப். 24ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாள் ஆகும். அந்த நாளில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த சசிகலா முடிவு செய்துள்ளாராம். ராமநாதபுரம் அல்லது மதுரையில் ஏதேனும் ஒரு இடத்தில் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் தனிக்கட்சி அறிவிப்பை சசிகலா வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சசிகலாவின் இந்த முடிவு எடப்பாடி பழனிசாமி, தினகரன், ஓபிஎஸ் ஆகியோருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதிமுக வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி சசிகலா வட்டாரத்தில் விசாரித்த போது, முதல்வர் பதவி வழங்கிய சசிகலாவுக்கே எடப்பாடி துரோகம் செய்து விட்டார். அந்த துரோக பட்டியலில் தினகரன், ஓபிஎஸ்சும் இணைந்து விட்டனர். இந்த சூழ்நிலையில் தனிக்கட்சி துவங்கி, அரசியலில் தனது பலத்தை நிரூபிக்க சசிகலா முடிவு செய்துள்ளார். ஜெயலலிதா பிறந்த நாளில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பொதுக்கூட்ட ஏற்பாடுகளை செய்ய தனது தம்பி திவாகரனின் மகன் மற்றும் தனது கணவர் நடராஜனின் நெருங்கிய உறவினர் ஒருவர் ஆகியோரிடம் ஒப்படைத்துள்ளார். அந்த பொதுக்கூட்டத்தில் தனிக்கட்சி அறிவிப்பை சசிகலா வெளியிடுவார். மேலும் தவெகவுடன் கூட்டணி அமைக்கும் முடிவிலும் சசிகலா உள்ளார். இது தொடர்பாக விஜய் தரப்பிடம் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாம். தென் மாவட்டங்களில் அதிக தொகுதிகளில் போட்டியிட சசிகலா முடிவு செய்துள்ளார். சசிகலாவும் தனக்கு சாதகமான ஏதேனும் ஒரு தொகுதியில் களமிறங்க உள்ளார்.