இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு இன்று தொடக்கம்: சென்னையில் 105 தேர்வு மையங்கள் அமைப்பு
சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வு இன்றும் நாளையும் நடக்கிறது. இந்த தேர்வுகளில் 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். சென்னையில் 105 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தாள் 1க்கான தேர்வு 15ம் தேதி நடக்கிறது. இந்த தேர்வில் பங்கேற்க இதுவரையில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 370 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்காக 367 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தாள் 2க்கான தேர்வு 16ம் தேதி நடக்கிறது. இந்த தேர்வில் பங்கேற்க 3 லட்சத்து 73
ஆயிரத்து 438 பட்டதாரிகள் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்காக தமிழகத்தில் 1241 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் போது உருவாக்கிய விண்ணப்ப ஐடி மற்றும் பாஸ்வேர்டுகளை மறந்து விட்டதால், இணைய தளத்தில் இருந்து தங்களுக்கான ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துள்ள வேறு ஏற்பாடும் செய்துள்ளது. இதன்படி, தங்களுக்கான ஹால்டிக்கெட்டுகளை https://trb.tn.gov.in இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்வுகளில் இன்று தாள் 1 க்கான தேர்வு நடக்கிறது.
இதில் தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 70 ஆயிரத்து 370 இடைநிலை ஆசிரியருக்கான டிப்ளமோ (டிடிஎட்) படித்தவர்கள் பங்கேற்கின்றனர். நாளை நடக்கின்ற தேர்வில் இளநிலை ஆசிரியர் பட்டம் (பிஎட் பட்டம்) பெற்றவர்கள் பங்கேற்கின்றனர். இன்று நடக்கிற தாள் 1 தேர்வில் சென்னையில் மட்டும் 6056 பேர் எழுதுகின்றனர். இவர்களுக்காக 23 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை நடக்கும் தாள்2க்கான தேர்வில் சென்னையில் மட்டும் 22 ஆயிரத்து 932 பட்டதாரிகள் பங்கேற்கின்றனர். இவர்களுக்காக 83 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.