2014ம் ஆண்டு முதல் 2025 நவ.30 வரை சுமார் 16,604 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது வழக்குப் பதிந்த அமலாக்கத்துறை: ஒன்றிய அரசு தகவல்
டெல்லி: 2014ம் ஆண்டு முதல் 2025 நவ.30 வரை சுமார் 16,604 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறை வழக்குகள் பதிந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. அவைகளில் 2,416 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், 56 வழக்குகளில் 121 பேர் மட்டுமே குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் 7வது நாளான இன்று அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்த புள்ளிவிரங்களை ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி 2014 முதல் தற்போதுவரை, 16,604 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது 6,444 பணமோசடி வழக்குகளைப் பதிவு அமலாக்கத்துறை செய்துள்ளது. அதில் 2,416 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 11,106 சோதனைகளை நடத்தியுள்ளது. ஆனால் இந்த 11 ஆண்டுகளில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறப்பு நீதிமன்றங்கள் 56 வழக்குகளில் 121 பேரை குற்றவாளிகளாக அறிவித்துள்ளது.
இந்த 11 ஆண்டுகளில், வருமான வரி துறை 13,877 வழக்குகளைப் பதிவு செய்து 9,657 சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த வழக்குகளில் 522 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 963 பேர் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டனர். மேலும் 3,345 வழக்குகளை வருமான வரி துறையே திரும்பப்பெற்றது. பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 2024-25ம் ஆண்டில் ரூ.30,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும், 2025-26 நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் ரூ.15,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.