Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்திய முப்படைகளின் திறனை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும் ரூ.52,000 கோடியில் ஆயுதங்கள் கொள்முதல் செய்ய பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல்

டெல்லி: இந்திய முப்படைகளின் திறனை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும் ரூ.52,000 கோடியில் ஆயுதங்கள் கொள்முதல் செய்ய பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. டிரோன் தாக்குதல்களை முறியடிக்கும் 'ஆகாஷ் தரங்' உள்ளிட்ட உபகரணங்கள், ஆயுதங்களை வாங்க ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில், பாதுகாப்புப் படைகளுக்கான ரூ.52,000 கோடி மதிப்பிலான பல்வேறு கொள்முதல் திட்டங்களுக்கு தேவைக்கான ஒப்புதல் அல்லது கொள்கை அளவிலான நிர்வாக ஒப்புதலை வழங்கியது.

இந்திய ராணுவத்தைப் பொறுத்தவரை, ஆளில்லா வான்வழி வாகன எதிர்ப்பு மின்னணு போர் முறைமையான 'ஆகாஷ் தரங்', கவச எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகள், தரையிலிருந்து விண்ணில் செலுத்தக்கூடிய நடுத்தர ஏவுகணை ஆயுத அமைப்பு, மிகக் குறைந்த தூர வான் பாதுகாப்பு அமைப்பு, பீரங்கிகளுக்கான செயலில் உள்ள பாதுகாப்பு அமைப்பு', ஜெட்-அடிப்படையிலான காமிகாஸ் வகை ட்ரோன் ஆகியவற்றை கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

'ஆகாஷ் தரங்' அமைப்பு ராணுவப் பிரிவுகளுக்கு பயனுள்ள ஆளில்லா விமான எதிர்ப்பு பாதுகாப்பை வழங்கும். கவச எதிர்ப்பு அமைப்பு, எதிரியின் எந்திரமயமாக்கப்பட்ட அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் ராணுவத்தின் திறனை மேம்படுத்தும். தரையிலிருந்து விண்ணில் செலுத்தக்கூடிய ஏவுகணை போன்ற பல்வேறு வகையான தொலைதூர வான்வழி அச்சுறுத்தல்களுக்கு எதிராக, நடுத்தர தொலைவிற்கான வான் பாதுகாப்பை வழங்குகிறது.

மல்டி-ஸ்பெக்ட்ரல் எனப்படும் பல்வேறு தொலையுணர் தொழில்நுட்பம் கொண்ட பாதுகாப்புத் தளவாடங்கள், இந்திய ராணுவத்தின் எதிர்-நடவடிக்கை திறன், செயல்திறனை மேம்படுத்தும். செயலில் உள்ள பாதுகாப்பு அமைப்பு பீரங்கிகளின் பாதுகாப்பு வழிமுறைகளை மேம்படுத்தி, போர்க்களத்தில் அவற்றின் செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கும். ஜெட்-அடிப்படையிலான காமிகாஸ் ட்ரோன்கள், அதிக அழிவுத்திறன், செயல் திறனுடன் சிறந்த மின்னணு போர் திறனை வழங்குவதுடன், செலவு குறைந்த தளவாடங்களாகவும் உள்ளன.

இந்திய கடற்படையைப் பொறுத்தவரை, 'மல்டி இன்ஃப்ளுயன்ஸ் கிரவுண்ட் மைன்', கடற்படை கப்பல் சார்ந்த ஆளில்லா வான்வழி அமைப்பு ஆகியவற்றை கொள்முதல் செய்யவும், மின்சார உந்துவிசை அமைப்புக்கான தரைவழி சோதனை வசதியை அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.