இந்திய அரிசிக்கு புதிய வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு
வாஷிங்டன்: இந்திய அரிசி மற்றும் கனடா நாட்டு உரங்களுக்கு புதிய வரிகளை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார். அமெரிக்காவின் அதிபராக 2வது முறையாக பொறுப்பேற்ற டிரம்ப், அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அமெரிக்கா இனி அமெரிக்கர்களுக்கே என்ற முழக்கத்துடன் செயல்பட்டு வருவதுடன், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு உச்சபட்ச வரியை அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வரிவிதிப்பால், அந்நாட்டை சார்ந்து வணிகம் மேற்கொண்டு வரும் இந்திய முதலீட்டாளர்கள் பாதிக்கப்படும் சூழல் நிலவி வருகிறது. இருநாடுகள் இடையேயான வர்த்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பெரிய முன்னேற்றம் இல்லாத நிலையில், இந்திய அரிசி மற்றும் கனடா நாட்டு உரங்களுக்கு புதிய வரிகளை விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
குறிப்பாக, விவசாய பொருட்களின் இறக்குமதிகள், குறிப்பாக கனடாவில் இருந்து இறக்குமதியாகும் உரங்கள் மீது புதிய வரிகளை அறிமுகப்படுத்த உள்ளார். அமெரிக்க விவசாயிகளுக்கான 12 பில்லியன் நிதி உதவியை அறிவிப்பது தொடர்பாக வெள்ளை மாளிகையில் கூட்டம் நடைபெற்றது.
அப்போது,மானிய விலையில் அரிசியை இறக்குமதி செய்வது அமெரிக்க சந்தைகளை பாதிக்கிறது. இதனால் உள்நாட்டு விலையில் பாதிப்பு காணப்படுகிறது, எனவே கடுமையான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர். மேலும், இந்தியா, வியட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகளினால் தாங்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.
கூட்டத்தில் டிரம்ப் பேசியதாவது; இந்தியாவிலிருந்து அதிக அரிசி இறக்குமதி செய்வதால் அமெரிக்க விவசாயிகள் பாதிக்கப்படுவதாக டிரம்ப் குற்றச்சாட்டியுள்ளார். குறைந்த விலையில் அமெரிக்க சந்தையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களால் உள் நாட்டு உற்பத்தியாளர்களுக்கு சவாலாக உள்ளது. பெரும்பாலான உரங்கள் கனடாவில் இருந்து இங்கே வருகின்றன. எனவே தேவைப்பட்டால் அவற்றின் மீது கடுமையான வரிகளை விதிப்போம். நீங்கள் என்னிடம் வலியுறுத்த விரும்புவதும் இதுதான். அதை இங்கே செய்ய முடியும். இவ்வாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.