மாஸ்கோ: டிச.4 ம் தேதி ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வர உள்ள நிலையில், இருநாட்டு உறவுகள் குறித்து ரஷ்ய அதிபர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. ரஷ்யா -உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக என்று கூறி ரஷ்யாவிடம் சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கூடுதல் வரிகளை விதித்தார். இதனையடுத்து இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை சமீபத்தில் குறைத்துள்ளது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு நாள் அரசு முறை பயணமாக வருகிற 4ம் தேதி இந்தியா வருகின்றார்.
ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வர உள்ள நிலையில், இருநாட்டு உறவுகள் குறித்து ரஷ்ய அதிபர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்; இந்திய-ரஷ்ய உறவு என்பது வெறும் ராஜாங்க ரீதியில் மட்டுமல்ல, அதில் ஆழமான வரலாற்று பின்னணி உள்ளது. இந்தியாவின் வளர்ச்சிக்கு, நாங்கள் தோளோடு தோளாக துணை நின்றதில் பெருமைப்படுகிறோம். இன்றைய காலகட்டத்தில் இந்தியாவின் நட்புரீதியான நிலைப்பாடுகளுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே ரஷ்ய துணை பிரதமர் டெனிஸ் மந்துரோவ் கூறுகையில்; ரஷ்ய அதிபர் புதினின் இந்திய பயணம் இருதரப்புக்கும் இடையிலான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும். இந்திய ரஷ்ய உறவு நெருக்கமாக உள்ள நிலையில், இருநாட்டு தலைவர்களும் தனிப்பட்ட பிணைப்பை கொண்டிருப்பதாக மந்துரோவ் குறிப்பிட்டார். அத்துடன் பல இந்திய மாணவர்கள் ரஷ்யாவில் கல்வி பயில்வதாகவும், அவர்களில் 14 ஆயிரம் பேர் மருத்துவம் பயில்வதாகவும் தெரிவித்த அவர், இந்தியா ரஷ்யா இடையே வர்த்தகம் மட்டுமல்லாது கல்வி, வணிகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளும் விரிவடைந்து வருவதாக குறிப்பிட்டார்.

