திருமலை: தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மேட்சலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 22 வயது இளம்பெண் நேற்று முன்தினம் பணிமுடிந்து தான் தங்கியுள்ள இடத்திற்கு உள்ளூர் ரயிலில் புறப்பட்டார்.
தனியாக மகளிர் பெட்டியில் அந்த பெண் பயணித்தார். அப்போது ஒரு நிறுத்தத்தில் வேறு பெட்டியில் இருந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் திடீரென பெண்கள் பெட்டிக்கு வந்தார். அந்த வாலிபர், இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் கொம்பள்ளி அருகே ரயில் சென்றபோது ரயிலில் இருந்து கீழே குதித்தார். ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாலிபரை தேடி வருகின்றனர்.

