மும்பை: மகாராஷ்டிரா பேரவை தேர்தலையொட்டி மக்களுக்கு கொடுக்க பிட்காயின் மூலம் பணம் விநியோகிக்க முயன்றதாக எழுந்த புகாரில் தணிக்கை நிறுவன ஊழியர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலையொட்டி வாக்களர்களுக்கு கிரிப்டோ கரன்சி வடிவில் பணம் விநியோகிக்க முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான ஒரு காணொலி பதிவை பாஜ செய்தி தொடர்பாளர் சுதன்சு திரிவேதி வௌியிட்டிருந்தார். அதில், கடந்த 2018ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திரபவார் தலைவர் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவும், மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலேவும் கிரிப்டோ கரன்சி ஊழலில் ஈடுபட்டதாக புனே முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவீந்திர பாட்டீல் கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இந்த கிரிப்டோ கரன்சியை பணமாக்குவதன் மூலம் அதை மகாராஷ்டிரா பேரவை தேர்தல் செயல்பாட்டில் செல்வாக்கு செலுத்தும் சதியில் சுப்ரியா சுலே, நானா படோலே ஆகியோர் ஈடுபட்டதாக கூறப்படும் இரண்டு குரல் பதிவுகள் அதில் உள்ளன. மேலும் இந்த கிரிப்டோ கரன்சி வழக்கில் முக்கிய சாட்சியாக தணிக்கை நிறுவன ஊழியர் கவுரவ் மேத்தா சுப்ரியா சுலேவுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கவுரவ் மேத்தாவுக்கு சொந்தமாக சட்டீஸ்கர் தலைநகர் ராய்பூரில் உள்ள அவரது வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஏதேனும் பணம், ஆவணம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதா என்ற தகவல்கள் வௌியாகவில்லை.

