எம்.எஸ்.எம்.இ தொழில் மேம்பாட்டில் ஒன்றிய அரசின் பங்களிப்பு என்ன? மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி
புதுடெல்லி: தமிழ் நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை (எம்.எஸ்.எம்.இ) மேம்படுத்துவதில் ஒன்றிய அரசின் பங்களிப்பு என்ன? என மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி எழுப்பினார்.
மக்களவையில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக் குழுத் துணைத்தலைவருமான தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விகள்:
2019 முதல் தமிழ்நாட்டில் எம்.எஸ்.எம்.இக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட குறிப்பிட்ட திட்டங்கள் மற்றும் நிதியுதவி திட்டங்கள் என்ன?
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எம்.எஸ்.எம்.இகளுக்கு வழங்கப்பட்ட நிதி விவரங்கள் என்ன?
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எம்.எஸ்.எம்.இ தொழில்துறை தொகுப்புகள் மற்றும் தொழில்துறை பூங்காக்களை உருவாக்க ஒன்றிய அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட புதிய எம்.எஸ்.எம்.இ தொழிற்பேட்டைகள் அல்லது வணிக காப்பகங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
எம்.எஸ்.எம்.இகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக தமிழ்நாட்டு அரசுடன் அமைச்சகம் இணைந்து பணியாற்றியுள்ளதா?
தமிழ்நாட்டில் எம்.எஸ்.எம்.இகளின் தொழில்நுட்பம் பயன்பாடு மற்றும் டிஜிட்டல் மாற்றத்தை மேம்படுத்த ஒன்றிய அரசால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் என்ன எனக் கேள்வி எழுப்பினார்.
