மகாகும்ப நகர்: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆறுகள் சங்கமிக்கும் பகுதியில் நடக்கும் மகாகும்பமேளா மிகவும் புகழ் பெற்றது. அதன்படி நடப்பாண்டு மகா கும்பமேளா கடந்த 13ம் தேதி தொடங்கியது. அடுத்த மாதம் பிப்ரவரி 26ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ள இந்த மாபெரும் ஆன்மீக நிகழ்வுக்கு உலகம் முழுவதுமிருந்து 45 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 10 நாள்களில் 10.8 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடி உள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வரும் பிப்ரவரி 1ம் தேதி 73 வௌிநாடுகளை சேர்ந்த தூதர்கள் மகாகும்பமேளாவில் கலந்து கொண்டு புனித நீராட உள்ளதாக கும்பமேளா அதிகாரி விஜய் கிரண் ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, உக்ரைன், ஜெர்மனி, நெதர்லாந்து, கேமரூன், கனடா, சுவிட்சர்லாந்து, போலாந்து, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தூதரக அதிகாரிகள் இதுதொடர்பாக உத்தரபிரதேச தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்” என்றார்.


