Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் ரபேல் போர் விமான பாகங்களை தயாரிக்கிறது டாடா

* ஐதராபாத்தில் அமைகிறது அதிநவீன உற்பத்தி கூடம்

* 2028 முதல் மாதம் 2 விமானங்கள் தயார் செய்ய திட்டம்

புதுடெல்லி: பிரான்ஸ் நாட்டில் இருந்து ரபேல் போர் விமானங்களை இந்தியா வாங்கி வருகிறது. கடந்த மாதம் கூட ரூ.64 ஆயிரம் கோடி மதிப்பில் 26 புதிய ரபேல் போர்விமானங்களை வாங்க இந்தியா மற்றும் பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் ஒப்பந்தம் செய்தன. அப்போது ரபேல் போர் விமான உதிரி பாகங்களை இந்தியாவில் தயாரிக்கும் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தமும், அதற்கு டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் ஒத்துழைப்பு வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டது. இந்த ஒப்பந்த அடிப்படையில் பிரான்ஸ் நாட்டிற்கு வெளியே முதன்முறையாக ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் முயற்சி இந்தியாவில் நடைபெற உள்ளது. டசால்ட் ஏவியேஷன் மற்றும் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் ஆகியவை இணைந்து வருகிற 2028ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் ரபேல் போர் விமானங்களுக்கான உதிரி பாகங்களை கூட்டாக தயாரிக்க உள்ளன.

மாதம் 2 விமானங்கள் அங்கிருந்து தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரபேல் விமானங்களுக்கான முக்கிய உதிரிபாகங்களை உற்பத்தி செய்ய ஐதராபாத்தில் ஒரு அதிநவீன வசதியை டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனம் அமைக்க உள்ளது. இது இந்தியாவின் பாதுகாப்புத்துறைக்கு ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இந்திய விமானப்படைக்கு ரூ.1.50 லட்சம் கோடி மதிப்பில் 114 புதிய மல்டி ரோல் புதிய போர் விமானங்களை வாங்க கடந்த 2019ல் டெண்டர் விடப்பட்டது. உலகின் மிகப்பெரிய ராணுவ கொள்முதல் டெண்டர் திட்டமாக இது கருதப்பட்ட நிலையில், தற்போது ரபேல் போர் விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் வகையில் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனமும், டசால்ட் ஏவியேஷனும் இணைந்து செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

இருநிறுவனங்களும் 4 ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதன்படி ரபேல் போர் விமானத்தின் பின்புற பகுதியின் பக்கவாட்டு ஓடுகள், முழுமையான பின்புறப் பகுதி, மைய பகுதி மற்றும் முன் பகுதி உள்ளிட்ட ரபேலின் முக்கிய கட்டமைப்பு பிரிவுகள் ஐதராபாத்தில் அமைக்கப்பட உள்ளது. இதை டசால்ட் ஏவியேஷனின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான எரிக் டிராப்பியர், டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநரான சுகரன் சிங்கும் தெரிவித்தனர்.