Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உச்ச நீதிமன்றத்துக்கு மூன்று நீதிபதிகள் நியமனம்: குடியரசுத் தலைவர் முர்மு ஒப்புதல்; இன்று பதவி ஏற்பு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றிய நீதிபதி சஞ்சீவ் கண்ணா கடந்த 13ம் தேதியும், மூத்த நீதிபதிகளில் ஒருவரான அபய் எஸ்.ஓஹா கடந்த 24ம் தேதியும் ஓய்வு பெற்றனர். இதனால், உச்ச நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34ல் இருந்து 31 ஆக குறைந்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த திங்கட்கிழமை கூடி மூன்று மாநில உயர்நீதிமன்றங்களில் இருந்து 2 தலைமை நீதிபதிகள் மற்றும் ஒரு மூத்த நீதிபதியை உச்ச நீதிமன்றத்திற்கு நீதிபதிகளாக நியமிக்க ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. அதன்படி கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.அஞ்சாரியா, கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜய் பிஷ்னோய் மற்றும் மும்பை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி ஏ.எஸ் சந்துர்கர் உள்ளிட்ட மூவரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.இந்த நிலையில் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் நேற்று தன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பதிவில் ஒரு தகவலை வெளியிட்டார்.

அதில், “இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, மேலும் மூன்று நீதிபதிகளை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் உச்ச நீதிமன்றம் அதன் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கையை எட்டி உள்ளது. இந்த மூன்று நீதிபதிகளும் இன்று காலை 10.30 மணிக்கு பதவி ஏற்க உள்ளனர். அவர்களுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.