புதுடெல்லி: நில விற்பனை தொடர்பான பண மோசடி வழக்கில் ராபர்ட் வத்ரா மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தியின் கணவரும், தொழிலதிபருமான ராபர்ட் வத்ரா, ஸ்கைலைட் ஹாஸ்பிட்டாலிடி பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அரியானாவில் இந்த நிறுவனம் டிஎல்எப் நிறுவனத்துக்கு செய்த நில விற்பனையில் பல கோடி அளவுக்கு பண மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் ராபர்ட் வத்ராவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து மூன்று நாள்கள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் ஷிகோபூர் நில விற்பனை தொடர்பான பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை ராபர்ட் வத்ரா மீது நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. மேலும் ராபர்ட் வத்ராவின் ரூ.37.6 கோடி மதிப்பிலான 43 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது

