திருவனந்தபுரம்: பங்குனி ஆறாட்டு திருவிழா மற்றும் சித்திரை விஷு சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 1ம் தேதி திறக்கப்பட்டது. மறுநாள் (2ம் தேதி) தொடங்கிய திருவிழா 11ம் தேதி நடைபெற்ற ஆறாட்டுடன் நிறைவடைந்தது. கடந்த 14ம் தேதி விஷுக்கணி தரிசனம் நடைபெற்றது. வருகிற 18ம் தேதி வரை சபரிமலை கோயில் நடை திறந்திருக்கும். மண்டல, மகரவிளக்கு காலத்திற்கு அடுத்தபடியாக இந்த மாதம் நீண்ட நாட்கள் நடை திறந்திருப்பதால் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 35 பக்தர்கள் அடங்கிய ஒரு குழுவினர் பஸ்சில் சபரிமலைக்கு சென்று கொண்டிருந்தனர்.
எருமேலி அருகே உள்ள பம்பாவாலி கணமலை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பஸ் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பஸ்சின் அடியில் சிக்கிக் கொண்டனர். விபத்து குறித்து அறிந்ததும் எருமேலி போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக இறந்தார். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பள்ளத்தில் கவிழ்ந்த பஸ் மரத்தில் சிக்கிக் கொண்டது. இதனால் அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை. எருமேலி அருகே உள்ள இந்த கணமலை பகுதி அடிக்கடி விபத்து நடைபெறும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


