*மாவட்ட இணை கலெக்டர் அறிவுறுத்தல்
திருப்பதி : திருப்பதி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மகளிர் வளர்ச்சி மற்றும் குழந்தைகள் நலத்துறை சார்பில், மாவட்ட அளவிலான பயிற்சி முகாம் இணை கலெக்டர் சுபம் பன்சால் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட குழந்தைகள் நலத்துறை அதிகாரி ஜெயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியை தொடக்கி வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து இணை கலெக்டர் சுபம் பன்சால் பேசியதாவது:
பெண் குழந்தைகளை காப்போம் பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தை திருமணம், டீன் ஏஜ் கர்ப்பம், ரத்தசோகை நோய் தடுப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து, பெண் குழந்தைகளின் நலனுக்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். குழந்தை திருமணங்களை கள அளவில் தடுக்க சிடிபிஓக்கள், ஏஎன்எம்கள், ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி ஆசிரியர்கள், மகளிர் போலீசார் ஒருங்கிணைத்து பொறுப்புடன் செயல்பட வேண்டும்ர்.
குழந்தைத் திருமணம், இளம் வயதிலேயே கர்ப்பம் தரிப்பது, உடல் நலக்குறைபாடுகள் போன்றவற்றால் பெண் குழந்தைகள் சந்திக்கும் சூழல்கள் குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்டத்தில் பள்ளிக்கு வராத சிறுமிகளை கண்டறிந்து மீண்டும் பள்ளிக்கு அழைத்து வர கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நல உதவியாளர்கள், பெண்கள் பள்ளிக்கு செல்லாததற்கான காரணங்களை அறிந்து, கல்வியில் ஆர்வம் காட்ட அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
குழந்தைகள் வளர்ச்சி குறித்து கிராம மற்றும் மண்டல அளவில் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை, கல்வித்துறை, காவல் துறை ஆகியவற்றுடன் கூட்டம் நடத்தி இளம் வயதில் கர்ப்பம் தரித்தவர்களுக்கு கல்வி கற்பித்து, இளம்பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பெண்கள் மேம்பாடு மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரி விஜயலட்சுமி பேசுகையில், ‘பெண் குழந்தைகளை பாதுகாக்கவும், அவர்களின் கல்வியை பேடி பச்சாவோ பேட்டி படாவோ என்ற முழக்கத்தின் கீழ் மத்திய அரசு இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இன்றைய சமூகத்தில் பெண் குழந்தைக்கு பாதுகாப்பின்றி தவித்து வருகின்றனர்.
பெண் குழந்தைகளை கருவுற்ற காலத்திலிருந்தே பாதுகாப்பதுடன், அவள் நிலைபெற வேண்டுமானால் கல்வியை ஊக்குவிப்பதும் நம் அனைவரின் கடமையாகும். இதைச் செய்ய முடிந்தால் சிறுமிகளுக்கு பாதுகாப்பு, அவர்களின் உரிமைகள் வழங்கப்படும்’ என்றார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, பேட்டி பச்சாவோ பேட்டி படாவோவுக்கான இலவச அவசர உதவி எண்களின் போஸ்டரை இணை கலெக்டர் சுபம் பன்சால் வெளியிட்டார். கூட்டத்தில் டிஆர்டி ஏபி டி சோபன்பாபு, மாவட்ட தனி அலுவலர் லோகநாதம், மகளிர் போலீஸ் டிஎஸ்பி லதா, மாவட்ட கல்வி அலுவலர் கேவிஎன் குமார், டிஎம்எச்ஓ ஸ்ரீஹரி, சிடிபிஓக்கள், மேற்பார்வையாளர்கள், டி.வி.ஓ.டி.க்கள், சுயநிதிக்குழுக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்டத் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


