அமராவதி: ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி இன்று நாடு முழுவதும் இன்று யோகா பயிற்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்.கே.கடற்கரையில் இருந்து போகபுரம் வரை 26 கிமீ நீளமுள்ள பாதையில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் யோகா பயிற்சி செய்ய முடியும். இதுகுறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று கூறுகையில், இன்று காலை 6.30 மணியில் இருந்து 8 மணி வரை யோகா நடைபெறும். இந்த நிகழ்வு அங்கீகாரம் பெறும் வகையிலும்,கின்னஸ் உலக சாதனை படைக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
25,000 பழங்குடியின மாணவர்கள் 108 நிமிடங்கள் சூரிய நமஸ்காரம் செய்வார்கள். ஒரே நேரத்தில் மிகப்பெரிய குழு மற்றும் அதிக மக்கள் சூரிய நமஸ்காரம் செய்யும் சாதனைகளை படைப்பதே இதன் நோக்கம் ஆகும். மாநிலம், நாடு மற்றும் உலகம் முழுவதும் எட்டு லட்சம் இடங்களில் இருந்து பங்கேற்பாளர்கள் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யோகா தின பயிற்சிகளில் பங்கேற்பதற்கான மதிப்பிடப்பட்ட இரண்டு கோடி பதிவுகள் 2.39 கோடியாக உயர்ந்துள்ளன’’ என்றார். விசாகப்பட்டினத்தில் நடக்கும் சர்வதேச யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதையொட்டி விசாகப்பட்டினத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


