Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாடாளுமன்றத்தில் பாஜ எம்பிக்களுக்கு தேசிய கொடி, ரோஜா பூ தரும் நூதன போராட்டம்: ராகுல் தலைமையில் நடந்தது

புதுடெல்லி: அதானி உள்ளிட்ட அனைத்து விவகாரம் குறித்து அவையில் விவாதிக்கக் கோரியும், நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த விடுமாறு வலியுறுத்தியும் நாடாளுமன்ற வளாகத்தில் பாஜ எம்பிக்களுக்கு தேசிய கொடி, ரோஜா பூ பரிசளித்து ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் நூதன போராட்டம் நடத்தினர். அதானி லஞ்ச விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த விடாமல், பொய்யான விஷயங்களை கிளப்பி பாஜ திசை திருப்பி வருவதை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தொடர்ந்து நூதன போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2 நாட்களில், அவை கூடும் முன்பாக நாடாளுமன்ற வளாகத்தில் மோடி, அதானி வேடமிட்டும், அதானி, மோடி கட்டிபிடித்த கார்ட்டூன் அச்சிட்ட ஜோல்னா பை போட்டுக் கொண்டும் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, நூதன போராட்டத்தின் 3ம் நாளான நேற்று பாஜ எம்பிக்களுக்கு தேசிய கொடி, ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர். மேலும் அவையை சுமூகமாக நடத்த விடுமாறு வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய அட்டையை கையில் வைத்திருந்தனர். அப்போது, அவைக்கு வந்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தேசியக் கொடி, ரோஜா பூ கொடுக்க முயன்றார். ஆனால் அவற்றை வாங்காத ராஜ்நாத் சிங் நன்றி கூறி விட்டு அவைக்கு சென்றார்.