புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்க உலக தலைவர்களை சந்திக்க இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட குழுவில் காங்கிரஸ் எம்பி சசிதரூர் இடம் பெற்று இருந்தார். அவர் பிரதமர் மோடி தலைமையிலான வெளியுறவுக்கொள்கையை வெகுவாக புகழ்ந்தார். இந்த சர்ச்சைக்கு மத்தியில் சசிதரூர் எழுதிய கட்டுரையில்,’ பிரதமர் மோடியின் ஆற்றல், சுறுசுறுப்பு, விருப்பம் ஆகியவை உலக அரங்கில் இந்தியாவிற்கு ஒரு முக்கிய சொத்தாக இருந்தன. பிரதமர் மோடி இந்தியாவின் மதிப்புமிக்க சொத்து’ என்று கூறினார்.
அவரது கருத்துக்கள் காங்கிரஸை எரிச்சலடையச் செய்தன. மேலும் அவர் பாஜவில் சேரக்கூடும் என்ற தகவல் பரவியது. ஆனால்,’ நான் பாஜவில் சேரவில்லை. மாறாக இந்தியா சார்பாக பேசினேன்’ என்று சசிதரூர் குறிப்பிட்டார். பிரதமர் மோடியை, சசி தரூர் புகழ்ந்து பேசியது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில்,’ நமக்கெல்லாம் முதலில் நாடுதான் முக்கியம். ஆனால் சிலருக்கு முதலில் மோடி தான்.
பின்னர்தான் நாடு என்கிறார்கள். நாம் அவர்களை என்ன செய்ய முடியும்’ என்று கூறி சசிதரூரை விமர்சனம் செய்தார். மேலும் அவர் கூறுகையில், ‘சசிதரூர் ஆங்கிலம் மிகவும் சரளமாகப் பேசக்கூடியவர். எனக்கு ஆங்கிலம் நன்றாகப் படிக்க, பேசத் தெரியாது. அவரது மொழி மிகவும் நன்றாக இருக்கிறது. அதனால்தான் அவரை காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக்கியுள்ளோம்’ என்றார்.

