Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஜெயசூர்யா, முகேஷ் எம்எல்ஏ உள்பட 4 நடிகர்கள் மீது கொடுத்த பலாத்கார புகார் வாபஸ்: மலையாள நடிகை அறிவிப்பு

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் நடிகைகள் உள்பட பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் குறித்து விசாரணை நடத்திய ஹேமா கமிட்டி அறிக்கை வெளிவந்த பின்னர் பிரபல நடிகர்கள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் பலர் மீது அடுத்தடுத்து பாலியல் புகார்கள் கூறப்பட்டன. எர்ணாகுளம் ஆலுவாவைச் சேர்ந்த மினு முனீர் என்ற நடிகை முன்னணி நடிகர்களான ஜெயசூர்யா, இடைவேளை பாபு, மணியன்பிள்ளை ராஜு மற்றும் நடிகரும், மார்க்சிஸ்ட் எம்எல்ஏவுமான முகேஷ் ஆகியோர் மீது பலாத்கார புகார் கொடுத்தார். இது தொடர்பாக போலீசார் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே நடிகை மினு முனீர் தன்னுடைய உறவினரின் 14 வயது மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ், மணியன்பிள்ளை ராஜு மற்றும் இடைவேளை பாபு ஆகியோர் மீது தான் கொடுத்த பலாத்கார புகாரை வாபஸ் பெறப்போவதாக நடிகை மினு முனீர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: நடிகர்கள் மீது நான் கொடுத்த புகார் தொடர்பாக கேரள அரசு முறையாக விசாரணை நடத்தவில்லை. விசாரணைக்கு அரசு எந்த ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை. என் மீது தொடரப்பட்ட போக்சோ வழக்கின் உண்மைத் தன்மையை அரசு நிரூபிக்க தவறிவிட்டது. இந்த சூழ்நிலையில் நான் நடிகர்கள் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற தீர்மானித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். ஆனால் கடிதம் கொடுத்தால் மட்டும் புகாரை வாபஸ் பெற முடியாது என்று சிறப்புப் பிரிவு போலீசார் தெரிவித்தனர். அரசுதான் வாதி. புகார்தாரர் முக்கிய சாட்சி ஆவார். மேலும் புகார்தாரர் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். நீதிமன்றத்தில் ஆஜராகும் போது தான் வழக்கை வாபஸ் பெறுவது குறித்து நீதிமன்றத்தில் கூற முடியும். என்று போலீசார் தெரிவித்தனர்.