Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கெஜ்ரிவால் தொடர்ந்த புதிய வழக்கில் ஒரு வாரத்தில் சிபிஐ பதிலளிக்க நோட்டீஸ்: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சிபிஐயும் அண்மையில் கைது செய்தது. இந்த நிலையில் சிபிஐ நடவடிக்கைக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ‘‘மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக கடந்த 2022ம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது. ஆனால் தற்போது திடீரென அவர் கைது செய்யப்பட அவசியம் மற்றும் காரணம் என்ன?. என்று கேள்வியெழுப்பினார். இதையடுத்து சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.பி.சிங், அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வாதங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி,‘‘சிபிஐ கைது நடவடிக்கைக்கு எதிராக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு, சிபிஐ விசாரணை அமைப்பு ஒரு வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. அந்த அறிக்கைக்கு இரண்டு நாளில் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் மறுபதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.