ஜம்முவிலிருந்து காஷ்மீருக்கு சிறப்பு வந்தே பாரத் ரயில் வெற்றிகரமாக சோதனை: சவாலான பாலங்களை கடந்து பயணம்
ஸ்ரீநகர்: ஜம்முவிலிருந்து காஷ்மீருக்கு புதிய வழித்தடத்தில் சிறப்பு வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. ஜம்முவில் இருந்து காஷ்மீரை இணைக்கும் வகையில் உதம்பூர்-ஸ்ரீநகர்-பாராமுல்லா இடையே 272 கிமீ தொலைவுக்கு புதிய ரயில் வழித்தட திட்டம் கடந்த ஆண்டு நிறைவடைந்தது. இந்த வழித்தடத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே ஆர்ச் வடிவ உலகின் மிக உயரமான ரயில்வே பாலமும், நாட்டின் முதல் கேபிள் வடிவ ரயில் பாலமாக அன்ஜி காத் பாலமும் கட்டப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் பல்வேறு இடங்களில் ரயில் சோதனை ஓட்டங்கள் சமீபத்தில் நடத்தப்பட்டன.
அதைத் தொடர்ந்து, இந்த புதிய வழித்தடத்தில் வந்தே பாரத் ரயிலின் முதல் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. ஜம்முவின் புறநகரான கத்ராவில் இருந்து தொடங்கியது. அங்கிருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயில், சவாலான பாலங்களை கடந்து வெற்றிகரமாக நகர் ரயில் நிலையத்தை நேற்று காலை 11.30 மணிக்கு வந்தடைந்தது. அங்கு ரயில்வே அதிகாரிகள் வெற்றி கோஷமிட்டு ரயிலை வரவேற்றனர்.

