கொழும்பு: உலகின் தெற்கு நாடுகளின் 3வது உச்சி மாநாடு நேற்று முன்தினம் நடந்தது. இணைய வாயிலாக நடந்த மாநாட்டிற்கு பிரதமர் மோடி தலைமை வகித்தார்.மாநாட்டில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பேசுகையில்,‘‘ இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் வரலாற்று ரீதியான ஒத்துழைப்பு நீண்ட காலமாக உள்ளது. இந்த ஒத்துழைப்பு எதிர்காலத்தில் நெருக்கமான உறவுகளுக்கு வழிவகுக்கும். மேற்கத்திய உலகம் உலக தலைமைத்துவத்தின் மீது ஆதிக்கம் செலுத்த முடியாத நிலைக்கு வந்துள்ளது.
இப்போது பிரச்னைக்குரிய பகுதியாகவும் மேற்கு உலகம் மாறியுள்ளது. உக்ரைனும்,காசாவும் அதற்கு முக்கிய காரணம். இந்த சூழலில் உலகளாவிய தெற்கு நாடுகளை வலுப்படுத்தும் இந்தியாவின் முயற்சிகளை பாராட்ட வேண்டும். ஜப்பானில் இருந்து இந்தியா வரை பொருளாதார உடன்படிக்கைகளை ஏற்படுத்துவதே இலங்கையின் நோக்கம். குறிப்பாக இந்தியாவுடன் ஆழமான உறவை விரும்புகிறோம்’’ என்றார்.


