Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மூன்று நிதியாண்டுகளுக்கு மேலும் ரூ.1744 கோடி வரி பாக்கி செலுத்த காங்.க்கு வருமான வரித்துறை உத்தரவு

புதுடெல்லி: கடந்த 2014-15 ம் ஆண்டில் இருந்து 2016-17 ம் ஆண்டு வரையிலான 3 நிதியாண்டுகளுக்கு மேலும் ரூ.1744 கோடி வருமான வரி இருப்பதாக காங்கிரசுக்கு வருமான வரித்துறை புதிய நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மக்களவை தேர்தலையொட்டி கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் காங்கிரஸ் வருவாய் தொடர்பாக மறுமதிப்பீட்டு நடவடிக்கையை வருமான வரித்துறை மேற்கொண்டு வருகிறது.

இது தேர்தல் நேரத்தில் கட்சியின் செயல்பாடுகளை முடக்கும் நடவடிக்கை என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. ஏற்கனவே 5 நிதியாண்டுகளுக்கு ரூ.1823 கோடி செலுத்த கோரி வருமான வரித்துறையிடம் இருந்து கடந்த 29ம் தேதி நோட்டீஸ் வந்ததாக காங்கிரஸ் தெரிவித்தது. முந்தைய ஆண்டுகளில் செலுத்த வேண்டிய வரி பாக்கி தொகையை கட்சியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.135 கோடி வலுக்கட்டாயமாக எடுத்ததாக வருமான வரித்துறை மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

இதை எதிர்த்து வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காங்கிரஸ் முறையீடு செய்தது. அதில், நிவாரணம் கிடைக்காததால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், 2014-15,2015-16, 2016-17 ஆகிய நிதியாண்டுகளுக்கு ரூ.1744 கோடி வரி பாக்கி இருப்பதாக அந்த கட்சிக்கு வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த நோட்டீஸ் போதிய ஆதாரங்கள் ஏதும் இல்லாமல் அனுப்பப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. தேர்தலில் போட்டியிடுவதில் அனைத்து கட்சிகளுக்கும் சமமான வாய்ப்பு அளிப்பதை பறிக்கும் விதமாக அரசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன என தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.