புதுடெல்லி: பிரதமராக பதவியேற்ற ஒரே வாரத்தில் வெளிநாட்டு பயணத்தை தொடங்குகிறார் மோடி. ஜி7 மாநாட்டில் பங்கேற்க அவர் நாளை இத்தாலிக்கு புறப்படுகிறார். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா மற்றம் ஜப்பான் ஆகியவை இணைந்து அமைத்துள்ள ஜி7 அமைப்பின் உச்சி மாநாடு இத்தாலியின் அபுலியாவில் உள்ள போர்கோ எக்னாசியாவில் நாளை தொடங்கி வரும் 15ம் தேதி வரை நடக்க உள்ளது. இம்முறை ஜி7 அமைப்பின் தலைவராக உள்ள இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனியின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி நாளை அந்நாட்டிற்கு செல்கிறார். 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற பிறகு மோடி செல்லும் முதல் வெளிநாட்டு பயணம் இது. மோடியுடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் செல்ல இருக்கின்றனர். இப்பயணத்தில் மோடி இத்தாலி பிரதமர் மெலோனி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட பல உலக தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். பயணத்தை முடித்துக் கொண்டு நாளை மறுதினம் இரவு டெல்லி திரும்புவார். இப்பயணம் குறித்து அரசு தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு மே மாதம் ஹிரோஷிமாவில் நடந்த ஜி7 உச்சி மாநாட்டிலும் மோடி பங்கேற்றார்.
Advertisement

