புதுடெல்லி: மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையே 767விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக அம்மாநில சட்டப்பேரவையில பாஜ கூட்டணி அரசு தெரிவித்தது. இது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் தள பதிவில்,” விவசாயிகளின் கடன் தள்ளுபடி மற்றும் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கோரிக்கையை அரசு புறக்கணிக்கிறது. யோசித்து பாருங்கள், மகாராஷ்டிராவில் மூன்று மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது வெறும் புள்ளி விவரமா? இல்லை. 767 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. 767 குடும்பங்களால் ஒருபோதும் மீள முடியாது.
அரசாங்கமோ அமைதியாக இருக்கிறது. அது அலட்சியமாக பார்த்துக்கொண்டு இருக்கிறது. விதை, உரம் மற்றும் டீசல் விலை அதிகமாக இருப்பதால் விவசாயிகள் ஒவ்வொரு நாளும் கடனில் மூழ்கி வருகின்றனர். ஆனால் குறைந்தபட்ச ஆதரவுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கடன் தள்ளுபடி கோரும்போது அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். ஆனால் கோடிக்கணக்கில் கடன் வைத்திருப்பவர்களின் கடன்களை மோடி அரசு எளிதாக தள்ளுபடி செய்கிறது. இன்றைய செய்தியை பாருங்கள். அனில் அம்பானியின் ரூ.48000கோடி ஸ்டேட் வங்கி மோசடி” என்று குறிப்பிட்டுள்ளார்.
