Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

ரூ.20 கோடி கடன் தொல்லையால் குடும்பத்துடன் விஷம் குடித்து காரிலேயே 7 பேர் தற்கொலை: அரியானாவில் சோகம்

சண்டிகர்: ரூ.20 கோடி கடன் தொல்லையாலும் மன உளைச்சலாலும் தொழிலதிபர், அவரது மனைவி, 3 குழந்தைகள், தந்தை, தாய் என 7 பேரும் குடும்பத்துடன் காரிலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் அரியானாவில் நடந்துள்ளது. அரியானாவின் பஞ்ச்குலா செக்டார் 27 பகுதியில் நேற்று முன்தினம் இரவு சாலையோரத்தில் கார் ஒன்று நின்றிருந்தது. அவ்வழியாக வந்த ராணா என்பவர், கார் கதவில் துணி சிக்கியிருப்பதை பார்த்து சந்தேகமடைந்து அருகில் சென்று பார்த்தார்.

அப்போது காரில் சிலர் வாயில் ரத்தத்துடன் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து இறந்து கிடைந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மற்றொரு நபர் மட்டும் பாதி மயக்கத்தில் இருந்துள்ளார். அவர், ‘‘குடும்பத்துடன் நாங்கள் தற்கொலை செய்து கொண்டோம். இன்னும் 5 நிமிடத்தில் நானும் இறந்து விடுவேன்’’ என கூறி உள்ளார். உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு விரைந்து வந்தனர். அரை மயக்கத்தில் இருந்த நபர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்தார்.

காரிலிருந்து 6 பேரின் சடலங்களை போலீசார் மீட்டனர். இவர்கள் பஞ்ச்குலாவின் சக்ரேதி பகுதியில் வசிக்கும் பிரவீன் மிட்டல் (41) என்பவரின் குடும்பத்தினர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இறந்தவர்கள் அவரது மனைவி, இரட்டை மகள்கள், ஒரு மகன், தந்தை, தாய் என்பது தெரிந்தது. பிரவீன் மிட்டல் பாதி மயக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட விவரத்தை கூறி உள்ளார். போலீஸ் விசாரணையில், பிரவீனுக்கு கடந்த 10 ஆண்டாகவே தொழில் நஷ்டம் காரணமாக ஊர் ஊராக குடும்பத்துடன் அலைந்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் வசித்த இக்குடும்பத்திற்கு ரூ.20 கோடி வரை கடன் ஏற்பட்டுள்ளது. இதனால் கடன் கொடுத்த வங்கிகள் அவர்களால் முடிந்த அனைத்து சொத்துக்கள், பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். கடந்த சில ஆண்டாக டாக்சி ஓட்டி வந்த பிரவீன் மிட்டல் குடும்பத்தை நடத்த கஷ்டப்பட்டுள்ளனர். இந்த விரக்தியில் குடும்பத்துடன் அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.