புதுடெல்லி: மக்களவையில் நடந்த ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் பேசிய திமுக எம்பி ஆ.ராசா, ‘பாஜவுக்கு நாடாளும் தகுதி இல்லை’ என ஆவேசமாக பேசினார். அவர் கூறியதாவது: ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில், குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாலே வெற்றி எனக் கூறக் கூடாது. பஹல்காம் தாக்குதல் குறித்து உளவுப் பிரிவும், ரா அமைப்பும் பல முன்னெச்சரிக்கைகளைக் கொடுத்த பிறகும் அரசு எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யவில்லை. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், குழந்தை போல பேசுகிறார். ‘‘எத்தனை பென்சில் உடைந்தது என்று கேட்காதீர்கள் தேர்வின் முடிவை பாருங்கள்’’ என்கிறார். போரில் இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா என்பதற்கு, இந்தியா வென்றதை பாருங்கள் என கூறுகிறார்.
பஹல்காம் தாக்குதல் உளவுத்துறை தோல்வியால் நிகழ்ந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது நிர்வாகத்தின் திறமையின்மையையும் நாட்டை நிர்வகிக்க இயலாமையையும் காட்டுகிறது. இந்த நாட்டை ஆளுவதற்கு பாஜவுக்கு தகுதியில்லை. அத்தகைய அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. நீங்கள் நேருவை பின்பற்ற வேண்டாம். அது உங்களால் முடியாது. அதற்கு தகுதியும் இல்லை. ஆனால் குறைந்தபட்சம் பாஜ பிரதமரான வாஜ்பாயையாவது பின்பற்றுங்கள். கார்கில் போருக்கு பிறகு அவர் விளக்க அறிக்கை வெளியிட்டதை பின்பற்றுங்கள். இவ்வாறு ஆ.ராசா கூறினார்.
மோடி அவைக்கு வராது ஏன்? திருச்சி சிவா எம்பி கேள்வி
மாநிலங்களவையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தின் போது திமுக எம்.பி திருச்சி சிவா பேசுகையில்,’ நம்முடைய பிரதமர் எங்கே? நாங்கள் அவரைப் பார்க்க வேண்டும். நாடாளுமன்றத்தில் அவரைப் பார்க்கவில்லை. நாடாளுமன்றம்தான் உயர்ந்தது. மோடி தன்னை கடவுளின் மகன் என்றார். அந்த ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமே அவர் கண்ணுக்குத் தெரியாதவர்’ என்றார்.


