Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சித்தூரில் பிரசித்தி பெற்ற காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

*விடுமுறை தினத்தையொட்டி திரண்ட பக்தர்கள்

சித்தூர் : சித்தூரில் பிரசித்தி பெற்ற காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பக்தர்கள் 5 மணிநேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

சித்தூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று காணிப்பாக்கம் சுயம்பு வரசித்தி விநாயகர் கோயில். கனி என்ற சொல் ஒரு ஈர நிலத்தை குறிக்கும், மேலும் பாக்கம் என்பது அதன் வழியாக நீர் ஓட்டத்தை குறிக்கிறது.

கோயிலுக்கு அருகில் புனிதமான பஹூதா நதி பாய்கிறது. இது இந்த ஸ்தலத்தின் பாரம்பரியத்தை வளப்படுத்துகிறது. குறிப்பிடத்தக்க வகையில், சுயம்பு விநாயகர் சிலை கோயிலின் கிணற்றில் உள்ளது. மேலும் அது படிப்படியாக வளர்ந்து வருவதாக நம்பப்படுகிறது. இந்த புனிதமான கிணற்றில் இருந்து வரும் நீர் பக்தர்களுக்கு தீர்த்தமாக வழங்கப்படுகிறது.

இக்கோயிலுக்கு சித்தூர் மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து அவர்கள் வேண்டுதலுக்கு ஏற்ப கோயில் உண்டியலில் காணிக்கை செலுத்தி செல்கின்றனர். இதனால் வரசித்தி விநாயகர் கோயிலில் எப்போதுமே பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும்.

இந்நிலையில் நேற்று விடுமுறை என்பதால் வழக்கத்தை விட காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

அதேபோல் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் பக்தர்களும், காணிப்பாக்கம் விநாயகர் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இதனையொட்டி காலை முதலே கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

மேலும், சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் 5 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். மேலும், தரிசன வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு மோர், குடிநீர் உள்ளிட்டவை தடையின்றி வழங்கப்பட்டது.

தொடர்ந்து, கோயில் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், பக்தர்களின் வருகை அதிகரித்ததால் கோயில் பார்க்கிங் முழுவதும் நிரம்பி சாலையோரங்களில் வாகனங்கள் அணிவகுத்தபடி நின்றன. இதனால் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட கடைகளில் விற்பனை களைகட்டி வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஒரே நாளில் 21 ஆயிரம் பேர் தரிசனம்

காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் நேற்று முன்தினம் 21 ஆயிரத்து 334 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோல் கோயிலுக்கு ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 631 பணத்தை பக்தர்கள் நன்கொடையாக வழங்கினர். 12 ஆயிரத்து 394 பக்தர்கள் அன்ன பிரசாதம் அருந்தினர். கோயில் தரிசன டிக்கெட் கட்டணம் மூலம் கோயிலுக்கு ரூ.7 லட்சத்து 61 ஆயிரத்து 500 வருமானம் கிடைத்தது.