Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குழந்தைகள் உணவில் கூடுதல் சர்க்கரை தொடர்பாக ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? மக்களவையில் கனிமொழி எம்.பி கேள்வி

புதுடெல்லி: குழந்தைகள் உணவில் கூடுதல் சர்க்கரை விவகாரத்தில் ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவையில் திமுக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எழுப்பிய கேள்வியில், “குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் சேர்க்கப்பட்ட சர்க்கரை அளவை கட்டுப்படுத்த அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட முன்மொழிவு நடவடிக்கைகள் என்ன? மேலும் உலகளாவிய சுகாதார பரிந்துரைகளுக்கு இணங்க, குழந்தை உணவுகளில் சேர்க்கப்படும் சர்க்கரைக்கான வழிகாட்டுதல்களை உருவாக்கவோ அல்லது தரநிலைகளை நிறுவவோ ஒன்றிய அரசிடம் ஏதேனும் திட்டங்கள் உள்ளதா? அப்படியென்றால் அதன் விவரங்கள் என்ன? இல்லையென்றல்அதற்கு என்ன காரணம்?” என்று தெரியப்படுத்த வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஒன்றிய அமைச்சர் ஜெ.பி.நட்டா அளித்த பதிலில், “ஊடக செய்திகளின் அடிப்படையில் கோதுமை அடிப்படையிலான குழந்தைக்கான உணவு பொருட்களில் சர்க்கரை சேர்க்கப்படுவது குறித்து இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் சுய ஆய்வு செய்யப்பட்டது. அதில் சர்க்கரை அளவு அனுமதிப்பட்ட அளவுக்குள் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

* தாமிரபரணி சீரமைப்பு ஒன்றிய அமைச்சரிடம் மனு

தாமிரபரணி நதியின் 125 கி.மீ., தூர்வாரும் புனரமைப்பு மற்றும் புனரமைப்புக்கான ஆரம்ப கட்டத்தில் ரூ.570 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஒன்றிய ஜல்சக்தி அமைச்சர் சி.ஆர்.பட்டேலிடம் திருநெல்வேலி தொகுதி எம்.பி ராபர்ட் புரூஸ் கோரிக்கை மனுவை நேற்று வழங்கினார்.