Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

நீட் தேர்வு முறைகேடு வழக்கு குஜராத் பள்ளி உரிமையாளரை கைது செய்தது சிபிஐ

கோத்ரா: நீட் தேர்வு முறைகேடு வழக்கில் குஜராத்தை சேர்ந்த தனியார் பள்ளி உரிமையாளரை சிபிஐ கைது செய்துள்ளது. இளநிலை மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த மே 5ம் தேதி நடைபெற்று. ஜூன் 4ம் தேதி தேர்வு முடிவுகள் வௌியிடப்பட்டன. இதில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, ஒரே தேர்வு மையத்தை சேர்ந்த தேர்வாளர்கள் அதிக மதிப்பெண் பெற்றது, 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது போன்ற விவகாரங்கள் சர்ச்சையை கிளப்பி உள்ளன.

இந்த விவகாரத்தில் பீகாரின் பட்னாவில் 13 பேர், குஜராத்தில் 5 பேர் உள்பட 18 பேர் மாநில காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  எதிர்க்கட்சிகளின் தொடர் கண்டனங்களையடுத்து தேசிய தேர்வு முகமையின் தலைவர் சுபோத் சிங் பதவி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் நீட் தேர்வு முறைகேடு குறித்து சிபிஐ விசாரணகை்கும் ஒன்றிய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக 6 வழக்குகளை பதிவு செய்துள்ள சிபிஐ கடந்த 23ம் தேதி முதல் விசாரணையை தொடங்கியது.

அதன்படி பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த 2 பேரை சிபிஐ அதிகாரிகள் கடந்த 27ம் தேதி கைது செய்தனர். அதைதொடர்ந்து ஜார்க்கண்டில் ஒரு பள்ளி முதல்வர், துணை முதல்வர் ஆகியோரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒரு பள்ளி முதல்வரை சிபிஐ கைது செய்துள்ளது. கோத்ரா மாவட்டத்தில் பர்வாடி கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் நீட் தேர்வு நடந்துள்ளது.

இதையடுத்து அந்த பள்ளியின் உரிமையாளர் தீட்சித் படேலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தீட்சித் படேல், தனது பள்ளியில் தேர்வு எழுதிய பலரிடம் ரூ.10 லட்சம் வாங்கிக் கொண்டு தில்லுமுல்லு செய்ய உதவியது தெரியவந்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கில் குஜராத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளது. தீட்சித் படேலை பஞ்ச் மகால் மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆஜர் படுத்தினர். அப்போது அவரை 4 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையே அவரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ திட்ட மிட்டுள்ளது.