பாபர் ஆட்சியில் அயோத்தி, சம்பலில் நடந்தது இன்று வங்கதேசத்தில் நடப்பது ஒரே மரபணு: உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய நாத் கருத்து
அயோத்தி: உத்தரபிரதேசம் அயோத்தி ராமர் கோயிலில் நேற்று நடந்த 43வது ராமாயண மேளா நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆதித்ய நாத், “500 ஆண்டுகளுக்கு முன் முகலாயர் பாபரின் ஆட்சியில் அயோத்தியிலும், சம்பலிலும் என்ன நடந்ததோ, அதுதான் இப்போது வங்கதேசத்திலும் நடக்கிறது. சமூகத்தில் தடைகளை உருவாக்குபவர்கள் வெற்றி பெற முடிந்துள்ளது. அவர்களின் மரபணுக்கள் இன்னமும் அப்படியே இருக்கின்றன. சமூக கட்டமைப்பை சிதைக்க சாதி அடிப்படையிலான அரசியலில் ஈடுபடுபவர்கள் இன்னமும் செயல்படுகிறார்கள்” என்றார்.
அகிலேஷ் யாதவ் பதிலடி: கான்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், “முதல்வருக்கு யாதவுக்கு எவ்வளவு அறிவியல் தெரியும், உயிரியல் பற்றி எவ்வளவு படித்துள்ளார் என எனக்கு தெரியாது. ஆனால் யோகியாக இருக்கும் ஆதித்ய நாத்துக்கு மரபணு பற்றி பேச்சு பொருந்தாது. அதனால் இனி அதுபோல் பேச வேண்டாம். நான் என் மரபணுவை சோதித்து கொள்ள விரும்புகிறேன். ஆனால் முதலில் யோகி ஆதித்ய நாத் அவரது மரபணுவை சோதித்து பார்க்க வேண்டும்” என காட்டமாக தெரிவித்தார்.
