அமிர்தசரஸ் கோயில் குண்டுவெடிப்பு: பாக்.கின் ஐஎஸ்ஐக்கு தொடர்பு ? போலீஸ் என்கவுன்டரில் சந்தேக நபர் பலி
சண்டிகர்: பஞ்சாபில் அமிர்தசரஸ் கோயில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சந்தேக நபர் போலீசாரால் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார். பஞ்சாபின் சண்டிகரில் உள்ள தாகூர் துவாரா கோயிலில் கடந்த 15ம் தேதி பைக்கில் வந்த இரண்டு மர்மநபர்கள் கோயில் வளாகத்திற்குள் அருகே குண்டு வீசி சென்றனர். குண்டு வெடித்ததில் கோயில் சுற்றுச்சுவர் சேதமடைந்தது. மேலும் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன. இந்த வழக்கில் ராஜாசான்சியில் சந்தேக நபர்களை போலீசார் கண்காணித்து வந்தனர்.
அப்போது பைக்கில் வந்த அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயற்சித்தபோது போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் தலைமை காவலர் குர்பிரீத் சிங்கின் கையில் குண்டு பாய்ந்தது. மேலும் ஆய்வாளர் அமோலாக் சிங்கின் தலைப்பாகையை குண்டு தட்டிச்சென்றதால் அவர் உயிர்தப்பினார். இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய என்கவுன்டரில் துப்பாக்கி சூடு நடத்திய நபர்களின் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். மற்றொருவன் பைக்கில் அங்கிருந்து தப்பிச்சென்றான்.
போலீசாரின் துப்பாக்கி சூட்டில் பலியான நபர் பால் கிராமத்தை சேர்ந்த குர்சிதக் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் சிறையில் இருந்து வெளியே வந்ததாக தெரிகின்றது. தப்பிச்சென்ற விஷால் ராஜாசான்சியை சேர்ந்தவன். இவனை கைது செய்வதற்கு போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பஞ்சாப் போலீசார் கூறுகையில், ‘‘அமிர்தசரஸ் கோயில் அருகே குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கு தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது” என்றார்.
