டெல்லி ரயில் நிலையத்தில் 18 பேர் பலி அதிக டிக்கெட் விற்பனை செய்யப்படுவது ஏன்? ஒன்றிய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
புதுடெல்லி: கடந்த சனிக்கிழமை புதுடெல்லி ரயில் நிலையத்தில், கும்பமேளா செல்ல ரயிலில் ஏற முயன்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாய் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘ஒரு பெட்டியில் எவ்வளவு பயணிகள் பயணிக்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்ட பிறகு ஏன் கூடுதல் முன்பதிவில்லா டிக்கெட்கள் விற்பனை செய்யப்படுகிறது?இத்தகைய செயல்பாடுகள் ரயில்வே சட்டப் பிரிவு 57ஐ மீறுவதாகும் என்று கேட்டனர்.
அப்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை ரயில்வே அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்தார். மீண்டும் குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்திருக்கலாம், ஆனால் அது போதுமானதாக இல்லாமல் இருக்கலாம். இருப்பினும் அதுதொடர்பாக பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யுங்கள். அதனை விரிவாக ஆய்வு செய்த பின்னர் அதுசார்ந்த பிரச்னைகளை தீர்த்து வைக்கலாம் என தெரிவித்தது, வழக்கின் விசாரணையை மார்ச் 26ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


