ஸ்ரீஹரிகோட்டா: இந்தியாவின் பிரம்மாண்டமான எல்விஎம்3 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது. எல்.வி.எம். ராக்கெட் மூலம் சிஎம்எஸ்03 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. கடற்படை, ராணுவ பயன்பாட்டுக்கான சிஎம்எஸ்03 செயற்கைக்கோள் ரூ.1,600 கோடியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 170 கி.மீ தொலைவு, அதிகபட்சம் 29,970 கி.மீ. தொலைவில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த இஸ்ரோ சார்பில் இதுவரை 48 செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் கடந்த 2013-ம் ஆண்டு செலுத்தப்பட்ட ஜிசாட்7 (ருக்மணி) செயற்கைக்கோளின் ஆயுள்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது.
அதற்கு மாற்றாக சுமார் ரூ.1,600 கோடியில் 4,410 கிலோ எடை கொண்ட அதிநவீன சிஎம்எஸ்03 செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் சந்திரயான்3 அனுப்பிய ஜி.எஸ்.எல்.வி மார்க் - 03 (எல்விஎம்-3) ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் 2வது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 5.26 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது. இதற்கான கவுனட்டவுன் நேற்று மாலை தொடங்கியது.
விண்ணில் செலுத்தப்பட்ட இந்த சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் 4,400 கிலோ எடை கொண்டது. இதுவரை புவிவட்ட பாதைக்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களில் இதுவே அதிக எடை கொண்டதாகும். இதில் விரிவுபடுத்தப்பட்ட மல்டி பேண்ட் தொழில்நுட்ப வசதிகள் உள்பட பல்வேறு நவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய பாதுகாப்புத் துறையின் கண்காணிப்புப் பணிகளுக்காக இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்பட உள்ளது. இந்திய கடலோர எல்லைகளைக் கண்காணிப்பதுடன், போர்க் கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கு இடையே தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்தவும் உதவும். எல்விஎம்-3 ராக்கெட்டின் 7வது ஏவுதல் திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
