இந்தியாவில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரிப்பு : 2025ம் ஆண்டு பதிவான புகார்களில் 39% குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை
டெல்லி : இந்தியாவில் பெண்களுக்கு எதிராக குடும்ப வன்முறை அதிகரித்து வருவதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. 2025ம் ஆண்டு பதிவான புகார்களில் 39% குடும்ப வன்முறை மற்றும் வரதட்சணை கொடுமை என தெரியவந்துள்ளது. இந்தியா முழுவதும் மகளிருக்கு எதிரான வன்முறைகள், பாலியல் குற்றங்கள் குறித்து தேசிய மகளிர் ஆணையம் புகார் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அந்த வகையில், 2025-ம் ஆண்டு 27,672 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் இதில் 39% குடும்ப வன்முறை மற்றும் வரதட்சணை கொடுமை புகார்கள் என்றும் தேசிய மகளிர் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது கடந்த 2024ம் ஆண்டு 25,743 ஆக இருந்தது. அதே போல் குடும்ப வன்முறை புகார்களும் 2024ம் ஆண்டில் 6,237 ஆக இருந்த குடும்ப வன்முறை புகார்கள் 2025-ல் 6,860 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் வரதட்சணை தொடர்பான புகார்கள் 2024ல் 4,383 ஆக இருந்த நிலையில், 2025ல் 3,986 ஆக குறைந்துள்ளது. இது தவிர பணியிடங்கள், இணையதளங்களிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளது என்றும் தேசிய மகளிர் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.

