எந்த விவாதமும் நடத்தாமல் புதிய வருமான வரி மசோதா 3 நிமிடங்களில் நிறைவேறியது: மேலும் 7 மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் அமளிக்கிடையே நிறைவேற்றியது ஒன்றிய அரசு
இதனிடையே பெரும்பாலான எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த நிலையில் கூச்சல் குழப்பங்களுக்கு இடையே மக்களவை, மாநிலங்களவையில் அரசு அவசர அவசரமாக சில மசோதாக்களை சிறிய விவாதத்துடன் நிறைவேற்றி உள்ளது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா சுதந்திரத்திற்கு பின் இந்திய விளையாட்டுகளின் மிகப்பெரிய சீர்திருத்தம் என்று அமைச்சர் மாண்டவியா தெரிவித்துள்ளார். அவைக்கு வந்த எதிர்க்கட்சிகள் முழக்கமிட்ட நிலையில் அவை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் 2மணிக்கு அவை தொடங்கியபோது, தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு திருத்த மசோதாவும் அவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா தொடர்பான விவாதத்தின்போது எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தியதால் அவைக்கு வெளியே தடுத்து நிறுத்தப்பட்டு இருந்தனர். இதனையடுத்து சுருக்கமான விவாதத்துக்கு பின் குரல் வாக்கெடுப்பு மூலமாக மசோதா நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரிவிதிப்பு சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2025 அறிமுகம் செய்தார். இது ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வரிவிலக்குகளை வழங்குவதை நோக்கமாக கொண்டதாகும். தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய வருமான வரி மசோதாவை மக்களவையில் அறிமுகம் செய்தார். இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர், இந்த வருமான வரி மசோதா 2025 வருமான வரி தொடர்பான சட்டத்தை ஒருங்கிணைத்து திருத்த முயற்சிக்கிறது. இது வருமான வரிச்சட்டம் 1961ஐக மாற்றும். தேர்வு குழுவின் அனைத்து பரிந்துரைகளும் அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மசோதா எந்த விவாதமும் இல்லாமல் 3 நிமிடங்களில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
கடந்த பிப்ரவரியில் அறிமுகப்படுத்திய வருமான வரி மசோதா 2025 திரும்ப பெற்ற அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரி சட்டத்தை ஆராய்ந்த நாடாளுமன்ற குழுவின் பரிந்துரைகளை உள்ளடக்கிய புதுப்பிக்கப்பட்ட பதிப்பை நேற்று அறிமுகம் செய்தார். எதிர்க்கட்சியின் முழக்கங்களுக்கு மத்தியில் தாக்கல் செய்த 3 நிமிடத்தில் எந்தவித விவாதமும் நடத்தாமல் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதேபோல் மாநிலங்களவையிலும் பல்வேறு இடையூறுகளுக்கு இடையே மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. வணிக கப்பல் மசோதா 2025 குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றியது. பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிஉறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பிற்பகல் அவை கூடியதும் எதிர்கட்சி உறுப்பினர்களின் கூச்சல், குழப்பங்களுக்கு இடையே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவானது, வணிக கப்பல்களின் உரிமைக்கான தகுதி அளவுகோள்களை விரிவுபடுத்துவது, கடல்சார் உயிரிழப்புக்கள் உள்ளிட்டவை குறித்த விசாரணைகளை உள்ளடக்கியதாகும்.
மேலும் மணிப்பூர் பட்ஜெட் ஒதுக்கீடு மசோதா மற்றும் மணிப்பூர் சரக்கு மற்றும் சேவை வரி திருத்தம் மசோதாவும் விவாதம் நடத்தப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலமாக ஒப்புதல் அளிக்கப்பட்டன.இதுமட்டுமின்றி கோவா சட்டப்பேரவையில் பட்டியல் பழங்குடியிருக்கு ஒட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவும் மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் நேற்று மொத்தம் 8 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
‘முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவோம்’
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் ஏற்கனவே நாடாளுமன்ற நடவடிக்கைகளில் நிறைய நேரத்தை வீணடித்துவிட்டனர். ஒவ்வொரு நாளும் நாடு மற்றும் நாடாளுமன்றத்தின் நேரத்தை ஒரு பிரச்னையில் வீணடிப்பதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எனவே முக்கியமான மசோதாக்களை நிறைவேற்றுவோம். முக்கிய மசோதா குறித்து விவாதிக்க அரசு ஆர்வமாக உள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் மீண்டும் மீண்டும் இடையூறு ஏற்படுத்துவதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. பொதுநலன் தொடர்பான பிரச்னைகளில் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. தினமும் ஒரு பிரச்னைக்காக மட்டுமே போராட்டம் நடத்துவதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்றார்.
மாநிலங்களவையில் கார்கே-நட்டா மோதல்
மாநிலங்களவையில், பிற்பகல் 2 மணிக்கு அவை தொடங்கியவுடன் வாக்கு திருட்டு பிரச்னையை எதிர்க்கட்சி தலைவர் கார்கே எழுப்ப முயன்றார். அப்போது அவைமுன்னவர் ஜேபி நட்டா, அவை அலுவல்களுடன் இது தொடர்புடையது அல்ல என்று கூறி ஆட்சேபனை தெரிவித்தார். மணிப்பூர் மசோதாக்களுடன் தொடர்பில்லாத எதையும் பதிவு செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தினார். அப்போது, கார்கேவுக்கும், ஜெ.பி.நட்டாவுக்கும் இடையே காரசார வாக்குவாதம் நடந்தது. மசோதாவின் ஒரு பகுதியாக இல்லாத எதுவும் பதிவு செய்யப்படாது என்று தலைமையில் இருந்த சஸ்மித் பத்ரா தெரிவித்தார். இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.