Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கொடுத்த மரணஅடி; இந்திய வரைபடத்தில் காஷ்மீர் இணைப்பு: டிரம்ப் நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை

புதுடெல்லி: அமெரிக்கா வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக காட்டப்பட்டுள்ளது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் வாஷிங்டனுக்கு பலமுறை பயணம் மேற்கொண்டு அமெரிக்காவின் ஆதரவைப் பெற தீவிரமாக முயற்சி செய்து வந்தனர். இருப்பினும், சர்வதேச அளவில் காஷ்மீர் பிரச்னையை எழுப்ப பாகிஸ்தான் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன.

சில நாட்களுக்கு முன்புதான் பாகிஸ்தான் பிரதமர் ‘காஷ்மீர் ஒற்றுமை தின’ உரையில் இப்பகுதி குறித்து சர்ச்சையான கருத்துக்களை மீண்டும் வலியுறுத்தியிருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சூழலில், இன்று வெளியிடப்பட்ட இந்தியா-அமெரிக்கா வர்த்தக கட்டமைப்பின் அதிகாரப்பூர்வ விளக்கப்படத்தில், ஜம்மு காஷ்மீர் முழுவதையும் இந்தியாவின் ஒரு பகுதியாக அமெரிக்கா காட்டியுள்ளது. அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் வெளியிட்ட இந்த வரைபடத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்திய எல்லைக்குள் சேர்க்கப்பட்டுள்ளது பாகிஸ்தானுக்கு பலத்த ராஜதந்திர அடியாக கருதப்படுகிறது.

‘இந்தியாவை பொருத்தமட்டில், அமெரிக்காவின் முதன்மையான மற்றும் மாற்ற முடியாத உலகளாவிய கூட்டாளி’ என்பதை அமெரிக்க அரசு நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மதுபானம் மற்றும் கொட்டை வகைகளின் இறக்குமதி வரி குறைப்பு தொடர்பான வர்த்தக ஆவணங்களில் இந்த வரைபடத்தை பயன்படுத்தியதன் மூலம், இந்தியாவின் எல்லை ஒருமைப்பாட்டை அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.