ஐஏஎஸ், ஐபிஎஸ் மெயின் தேர்வில் தமிழகத்தில் 162 பேர் வெற்றி பெற்று சாதனை: இந்திய அளவில் 2736 பேர் தேர்ச்சி
சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐ.எப்.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கு நடத்தப்பட்ட சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அளவில் 2736 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 162 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட 24 வகையான பதவிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான (2025) சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 979 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜனவரி 22ம் தேதி அறிவித்தது.
இத்தேர்வுக்கு இந்தியா முழுவதும் இருந்து சுமார் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் போட்டி போட்டு விண்ணப்பித்தனர். இதில் சுமார் 7 லட்சம் பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். தமிழகத்தில் சுமார் 24 ஆயிரம் பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கான முதல்நிலை தேர்வு கடந்த மே 25ம்தேதி நடந்தது. தொடர்ந்து முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட்டை கடந்த ஜூன் 11ம் தேதி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இதில் 14161 பேர் மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களுக்கான மெயின் தேர்வு ஆகஸ்ட் 22, 23, 24 மற்றும் ஆகஸ்ட் 30, 31ம் தேதி என 5 நாட்கள் நடந்தது. தமிழகத்தில் சென்னையில் மட்டும் இந்த தேர்வு நடந்தது. இந்த நிலையில் மெயின் தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து சங்கர் ஐஏஎஸ் அகடாமி இயக்குனர் வைஷ்ணவி கூறியதாவது: சிவில் சர்வீஸ் பணிக்கான மெயின் தேர்வு முடிவை யுபிஎஸ்சி தனது இணையதளமான www.upsc.gov.inல் வெளியிட்டுள்ளது.
இத்தேர்வில் இந்தியா முழுவதும் 2736 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து 162 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் சங்கர் ஐஏஎஸ் அகடாமி பயிற்சி மையத்தில் 104 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம் பயிற்சி மையங்களில் பயற்சி பெற்றவர்களில் மொத்தம் 477 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்ற அனைத்து மாணவர்களுக்காக நாங்கள் சிறப்பு நேர்முகத் தேர்வு வழிகாட்டும் திட்டம் நடத்த உள்ளோம். அவர்களுக்கு பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள், பிரபல பேராசிரியர், துறை நிபுணர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர்.
மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு அடுத்த கட்டமாக நேர்முக தேர்வு டெல்லியில் உள்ள யுபிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுவோருக்கு, அவர்கள் பெற்ற மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் பணிகள் ஒதுக்கப்படும். யாருக்கு என்ன பதவி என்பது அதன் பிறகுதான் தெரிய வரும். பதவிகள் ஒதுக்கப்பட்டவர்களுக்கு முசோரியில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி வழங்கப்படும். இவ்வாறு வைஷ்ணவி கூறினார்.
