Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எஸ்ஆர்எம் விடுதியை காலி செய்யும்படி அரசின் உத்தரவுக்கு தடை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு அதிரடி ரத்து: சுற்றுலாத்துறை பற்றி கூறிய கருத்தும் நீக்கம், ஐகோர்ட் கிளை நீதிபதிகள் உத்தரவு

மதுரை: எஸ்ஆர்எம் விடுதியை காலி செய்யும்படி அரசு உத்தரவுக்கு தடை விதித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை ஐகோர்ட் கிளை நீதிபதிகள் ரத்து செய்தனர். அதோடு அரசு சுற்றுலாத்துறை குறித்த அவரது கருத்தையும் நீக்கி உத்தரவிட்டனர். திருச்சி காஜா மலையில் அமைந்துள்ள எஸ்ஆர்எம் விடுதியின் குத்தகை காலம் முடிவடைந்ததால் அதனை காலி செய்யுமாறு சுற்றுலாத்துறை உத்தரவிட்டது. இந்த நடவடிக்கைக்கு தடை கோரி எஸ்ஆர்எம் விடுதியின் செயல் இயக்குனர் அந்தோணி அசோக்குமார் தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்யப்பட்டது.

அதில், ‘‘திருச்சி காஜாமலையில் அமைந்துள்ள எஸ்ஆர்எம் விடுதி 30 ஆண்டுகள் குத்தகைக்கு ஒப்பந்த அடிப்படையில் தமிழக அரசால் வழங்கப்பட்டது. 2022 முதல் விடுதிக்கான குத்தகை உரிமத்தை புதுப்பிப்பது தொடர்பாக, தமிழக அரசிடம் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. 13.5.2024ல் 20 ஆண்டுகளுக்கு குத்தகை ஒப்பந்தத்தை புதுப்பித்து தரக் கோரி மனு அளிக்கப்பட்டது. ஆனால் அதுவும் பரிசீலிக்கப்படவில்லை.

இந்நிலையில் விடுதியை காலி செய்யுமாறு சுற்றுலாத்துறை கூறியுள்ளது. குத்தகை ஒப்பந்த காலத்தை நீட்டித்து தருமாறு விண்ணப்பித்து உள்ள நிலையில் அதனை பரிசீலிக்காமல் அங்கிருந்து வெளியேற்ற முயற்சிப்பது சட்டவிரோதம். எனவே, திருச்சி எஸ்ஆர்எம் விடுதியை காலி செய்யும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும். குத்தகை காலத்தை நீட்டித்து தருமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை கடந்த வருடம் விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், குத்தகை காலத்தை நீட்டிப்பது தொடர்பான எஸ்ஆர்எம்மின் மனுவை அரசு நிராகரித்த உத்தரவை ரத்து செய்தார். இதை எதிர்த்தும், விடுதியை காலி செய்ய உத்தரவிட கோரியும் தமிழ்நாடு சுற்றுலா கழகம் சார்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்யப்பட்டது. அதில், ‘‘எஸ்ஆர்எம்மின் குத்தகை காலத்தை மேலும் நீட்டிக்க விரும்பவில்லை.

எனவே, எஸ்ஆர்எம் விடுதிக்கான குத்தகை உரிமத்தை நீட்டிப்பது தொடர்பான மனுவை நிராகரித்த தமிழக சுற்றுலாத் துறையின் உத்தரவை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும். சுற்றுலா கழகமே அந்த ஓட்டலை ஏற்று நடத்தும் என தெரிவிக்கப்பட்ட கருத்து ஏற்கத்தக்கதல்ல. நீதிபதி உத்தரவில் கும்கி பட யானையை ஒப்பிட்டு கூறியிருந்தார். எனவே, தனி நீதிபதியின் உத்தரவில் உள்ள கருத்துக்களையும் நீக்க வேண்டும்’’ என கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஆர்.பூர்ணிமா ஆகியோர், ‘‘குத்தகை உரிமம் முடிந்த பிறகு அதனை நீட்டிப்பதை உரிமையாக கூற முடியாது. அது முழுக்க, முழுக்க அரசின் முடிவோடு சம்பந்தப்பட்டது. தமிழ்நாடு சுற்றுலாத்துறை 1971ம் ஆண்டு முதல் பல்வேறு இடங்களில் ஓட்டல்களை நடத்தி வருகிறது. 2023-24ம் ஆண்டில் ரூ.32.33 கோடி வருமானம் ஈட்டியுள்ளது.

எனவே, தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஓட்டல் நடத்தும் விவகாரம் தொடர்பாக தனி நீதிபதி தெரிவித்த கருத்து அவரது தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். எனவே, இந்த வழக்கை பொறுத்தவரை திருச்சி காஜாமலை எஸ்ஆர்எம் விடுதியின் உரிமத்தை நீட்டிப்பது தொடர்பான மனுவை நிராகரித்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தமிழக சுற்றுலாத்துறை ஓட்டல்களை எடுத்து நடத்துவது தொடர்பாக தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் நீக்கப்படுகின்றன’’ எனக் கூறி மனுவை முடித்து வைத்தனர்.