உயர்நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளில் தீர்ப்பு வழங்குவது எப்போது? அறிக்கை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளில் தீர்ப்பு வழங்குவது எப்போது என்பது குறித்த அளிக்கை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் உட்பட பல உயர் நீதிமன்றங்கள், இறுதி வாதங்களைக் கேட்டு, தங்கள் முடிவுகளை முன்பதிவு செய்த பிறகு, பல ஆண்டுகளாக குற்றவியல் மற்றும் சிவில் வழக்குகளில் தீர்ப்புகளை வழங்காதது தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் தங்கள் உத்தரவில்,’ உயர் நீதிமன்றங்களில் எத்தனை வழக்குகள் வந்துள்ளன, அதில் எத்தனை தீர்ப்புகள் வழங்கப்பட்டன. எத்தனை வழக்குகளில் உத்தரவுகள் நிறைவேற்றப்பட்டன. எந்த தேதியில் தீர்ப்பு உயர் நீதிமன்ற வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டது என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். இதற்காக உயர் நீதிமன்ற வலைத்தளத்தில் ஒரு டேஷ்போர்டை அல்லது தனி சாளரத்தை உருவாக்குவது, நீதித்துறையின் மக்கள் மீதான பொறுப்புணர்வுகளைக் காண்பிக்கும். இந்த வழக்குகள் தொடர்பான விவரங்களை அலகாபாத், பஞ்சாப் மற்றும் அரியானா, பாட்னா, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக், கேரளா, தெலங்கானா மற்றும் கவுகாத்தி ஆகிய உயர் நீதிமன்றங்கள் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தயார் செய்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
அல்லது அடுத்த விசாரணைத் தேதியில் உயர் நீதிமன்றங்களின் பதிவாளர் ஜெனரல் நேரில் ஆஜராக வேண்டும். இந்திய அளவிலான வழிகாட்டுதல்களை வகுக்க, பொதுமக்களுக்குத் தகவல்களைப் பரப்புவதை மேம்படுத்துவது குறித்த பரிந்துரைகளை உயர் நீதிமன்றங்கள் வழங்க வேண்டும். இந்த ஆண்டு ஜனவரி 31 முதல் அக்டோபர் 31 வரை வந்த வழக்குகளின் எண்ணிக்கை, அந்தக் காலகட்டத்தில் தீர்ப்புகள் வழங்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, எந்த தேதியில் தீர்ப்புகள் உயர் நீதிமன்றத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டன என்பதையும் குறிப்பிட வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
