நேபாள வெள்ளம்: மீட்பு பணி குறித்த விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஒன்றிய, மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: நேபாள வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களை மீட்க எடுத்த நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கும்பகோணத்தை சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் என்ற தனியார் பயண நிறுவனம் மூலம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 57 பேர் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி கும்பகோணத்திலிருந்து நேபாளத்திற்கு சென்றனர். இந்நிலையில் ஆகஸ்ட் 26ம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் அவர்கள் சிக்கினார்.
வெள்ளத்தில் சிக்கியவர்களில் ஓய்வு பெற நீதிபதி சிவஞானம் உள்ளிட்டோரை பற்றி தற்போது வரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. நேபாளம் சென்ற தமிழகத்தை சேர்ந்த 57 பேரின் நிலவரம் குறித்த அவர்களது குடும்பத்தினருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் மீட்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என கூறி திண்டுக்கலை சேர்ந்த சர்வேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார் அந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருணமுருகன் ஆகியோர் அமர்வில் இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயநாராயணன், தமிழகத்தில் இருந்து கைலாச யாத்திரை சென்ற 305 பேரில் 220 மீட்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் மீதமுள்ள 85 பேரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இதில் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் உள்பட காணாமல் போனவர்களின் குடும்பத்தினர், அரசு செலவில் காத்மாண்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
இதனையடுத்து நேபாள வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களை மீட்க எடுத்த வரும் நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி ஒன்றிய மற்றும் மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கினுடைய விசாரணையை அடுத்த வாரம் ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.



