Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி கட்டுமானங்களுக்கு ஒப்புதல் வழங்க தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி, ஒரு கி.மீ. சுற்றளவுக்கு எந்த கட்டுமானங்களுக்கும் ஒப்புதல் வழங்க தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில், 3 வாரங்களில் பதிலளிக்க தமிழ்நாடு அரசு, பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட வழக்கில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு எந்த கட்டுமானங்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது என்று 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், பள்ளிக்கரணை சுற்றி ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்க தடை விதித்து 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவு காரணமாக கட்டுமான பணிகள் ஸ்தம்பித்துள்ளதாக கூறி, ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கூட்டமைப்பான கிரடாய் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், எந்தவித அறிவியல் பூர்வ ஆய்வும் மேற்கொள்ளாமல், சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு கட்டுமானங்கள் மேற்கொள்ளக் கூடாது என பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம் எம் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி அருள்முருகன் அடங்கிய அமர்வு, மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசு, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டது.