அரியானா மாநில மாணவர் இங்கிலாந்தில் படுகொலை: குடும்பத்தினர் கதறல்; போலீசார் விசாரணை
லண்டன்: இங்கிலாந்தில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட இந்திய மாணவரின் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இது குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்தின் வொர்செஸ்டர் பகுதியில் உள்ள பார்போர்ன் சாலையில் கடந்த நவம்பர் 25ம் தேதி வாலிபர் ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் இந்தியாவின் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த விஜய் குமார் (30) என்பது தெரியவந்தது.
இவர் பிரிஸ்டலில் உள்ள மேற்கு இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மாணவர் ஆவார். இந்த கொலை வழக்கு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 5 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட ஆறாவது நபர் மீது எவ்வித நடவடிக்கையும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, கொலைக்கான காரணம் மற்றும் குற்றவாளிகள் குறித்து வெஸ்ட் மெர்சியா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் உள்ள விஜய் குமாரின் குடும்பத்தினர், அவரது உடலை விரைவாகத் தாயகம் கொண்டு வரவும், கொலை குறித்து நியாயமான விசாரணை நடத்தவும் தூதரக உதவியை நாடியுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் போலீசாரை அணுகுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.