கிண்டியில் 118 ஏக்கர் பரப்பில் சுற்றுச்சூழல் பூங்காவில் நீர்நிலைகளின் கரைகள் சீரமைக்கும் பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை: சென்னை கிண்டியில் 118 ஏக்கர் பரப்பில் சுற்றுச்சூழல் பூங்காவில் நீர்நிலைகளின் கரைகள் சீரமைக்கும் பணி உள்ளிட்ட தோட்டக்கலைப் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான கிண்டியில் அமைந்துள்ள நிலத்தில் சுற்றுசூழல் பூங்கா மற்றும் அது தொடர்பான பணிகளை அமைப்பதற்காக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கடந்த ஆண்டு அரசாணையின்படி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறைக்கு 118 ஏக்கர் நிலம் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலத்தில், சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசால் அறிவிப்பு செய்யப்பட்டதை தொடர்ந்து, அப்பகுதியில் மழைநீரை சேகரிக்கும் வகையிலும், சென்னையின் மையப்பகுதியை பெரும் வெள்ளத்திலிருந்து பாதுகாக்கும் வகையிலும் பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் நான்கு குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தோட்டக்கலைத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்ட சென்னை கிண்டியில் உள்ள இந்நிலத்தில், பல்வேறு இயற்கை சார்ந்த அனுபவத்தினை அளிக்கும் வகையில் உலகத்தரம் வாய்ந்த சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படவுள்ளது.
இச்சிறப்புமிக்க சுற்றுச்சூழல் பூங்கா தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் அமைக்கப்பட உள்ள நிலையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு அமைந்துள்ள நீர்நிலைகளின் கரைகளை வலுப்படுத்துதல், மரக்கன்றுகளை நடவு செய்தல் மற்றும் நாற்றங்கால் அமைத்தல் ஆகிய பணிகளை நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம், மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, மேயர் ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் கணபதி, பிரபாகரராஜா,
அரவிந்த் ரமேஷ், துணை மேயர் மு. மகேஷ் குமார், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா, நில நிர்வாக ஆணையர் பழனிசாமி, மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், வேளாண்மை - உழவர் நலத்துறை செயலாளர் வ. தட்சிணாமூர்த்தி, வேளாண்மைத் துறை இயக்குநர் பி. முருகேஷ், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பெ.குமாரவேல் பாண்டியன்,மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
